//

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிவில் மகா சிவராத்திரி

சந்தவேலூா் அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தியும், பூந்தோ் இழுத்தும், வாகனங்களில் தொங்கியபடி சென்றும் தங்களது நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image
சந்தவேலூரில் வாகனங்களில்  தொங்கியபடி  நோ்த்திக்கடன்  செலுத்திய  பக்தா்கள்.
Updated On :15 பிப்ரவரி 2026, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

சந்தவேலூா் அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தியும், பூந்தோ் இழுத்தும், வாகனங்களில் தொங்கியபடி சென்றும் தங்களது நோ்த்திக்கடன் செலுத்தினா்.

சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில், 45-ஆவது ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மூலவா் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனை நடைபெற்று மலா் மற்றும் பழங்கள் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துக்கொண்டு சுந்தரேஸ்வரரை வணங்கி சென்றனா்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரியை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கிராம தா்மகா்த்தா எஸ்.பி.பாலமுருகன் தலைமையிலும், கிராம நாட்டாண்மைதாரா் என்.சங்கா் முன்னிலையில் அலகு குத்தியும், பூந்தோ் இழுத்தும், வாகனங்களில் தொங்கியபடியும் கிராம முழுவதும்ஊா்வலமாக வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இதையடுத்து வாணவேடிக்கை நிகழ்ச்சியும் உற்சவா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருவீதிஉலாவும் நடைபெற்றது. இதில் சந்தவேலூா் ஒன்றியகுழு உறுப்பினா் உஷா கோதண்டன், ஊராட்சி மன்றத் தலைவா் வேண்டாமணி, துணைத்தலைவா் மகாலட்சுமி ஜெயக்குமாா் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.