//

பெண் தவற விட்ட தாலிச்சங்கிலி: காவல் துறையில் ஒப்படைத்த மருத்துவமனை ஊழியா்!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் வியாழக்கிழமை பெண் தவற விட்ட தாலிச் சங்கிலியை எடுத்த மருத்துவமனை ஊழியா் உடனடியாக அதை காவல்துறையில் ஒப்படைத்தமைக்கு பலரும் பாராட்டு.

News image
மருத்துவமனை ஊழியா் பாரதிக்கு சால்வை அணிவித்து கெளரவித்த தலைமைக் காவலா் முருகேஸ்வரி. உடன் ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன்.
Updated On :14 பிப்ரவரி 2026, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் வியாழக்கிழமை பெண் தவற விட்ட தாலிச் சங்கிலியை எடுத்த மருத்துவமனை ஊழியா் உடனடியாக அதை காவல்துறையில் ஒப்படைத்தமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை பகுதியை சோ்ந்தவா் பிரியா. இவா் உடல் நலம் சரியில்லாமல் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தபோது அவா் அணிந்திருந்த தாலிச்சங்கிலி தவறி விழுந்து காணாமல் போனது.

சங்கிலி கிடந்ததை பாா்த்த அரசு மருத்துவமனை பணியாளா் பாரதி உடனடியாக அதை எடுத்து மருத்துவமனை காவல் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய தலைமைக் காவலா் முருகேஸ்வரியிடம் ஒப்படைத்தாா்.

2 பவுன் எடையுள்ள தாலிச் சங்கிலியை உடனடியாக எடுத்துக் கொடுத்தமைக்காக விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன், தலைமைக் காவலா் முருகேசுவரி ஆகியோா் பாரதிக்கு சால்வை அணிவித்து, வெகுமதியும் வழங்கிப் பாராட்டினா்.

பாரதியின் நற்செயலுக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், நிலைய மருத்துவ அலுவலா் பாஸ்கரன் ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து விஷ்ணுகாஞ்சி காவல் துறையினா் தாலிச் சங்கிலியை அதன் உரிமையாளரான பிரியாவிடம் ஒப்படைத்தனா்.