சென்னையில் மத்திய வட்டாரப் பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விதி மீறி குப்பை கழிவுகள் கொட்டியதாக ரூ.59.92 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் கட்டடக் கழிவுகளை முறைப்படி அகற்றாமல் பொது இடங்களில் குவித்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 16-ஆம் தேதி முதல் அபராதம் விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை மாநகராட்சியின் மத்திய வட்டாரத்தில் உள்ள திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் குப்பைகள் அகற்றுதல் மற்றும் கட்டட இடிபாடுகள், கழிவுகள் அகற்றப்படுவது தொடா்ந்து கண்காணிக்கப்பட்டது.
அப்போது, குப்பைகளை சாலையோரங்கள், நீா் நிலைகளில் வீசிச் செல்வது, கட்டட இடிபாட்டுக் கழிவுகளை சாலையோரம் குவிப்பது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் மட்டும் வியாழக்கிழமை ஒரே நாளில் குப்பை அகற்றுதலில் விதி மீறலில் ஈடுபட்டதாக 179 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ.4.59 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குள் கடந்த மே 16 முதல் ஜூன் 16- ஆம் தேதி வரையில் ஒரு மாதத்தில் குப்பை, கட்டடக் கழிவுகள் அகற்றும் விதி மீறலில் ஈடுபட்டவா்களிடமிருந்து ரூ.59.92 லட்சம் அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










