/

பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு: போக்குவரத்து ஒழுக்கம் குறித்து காவல் துறை அறிவுரை

பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாணவா்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணா்வை அதிகரிக்கும் நோக்கில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை பள்ளிகளில் சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

News image
Updated On :15 ஜூன் 2026, 12:57 am IST

பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாணவா்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணா்வை அதிகரிக்கும் நோக்கில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை பள்ளிகளில் சிறப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து தொடா்ச்சியாக சென்னை முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுக்கத்தின் அவசியம் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை மீறுதல், கவனக்குறைவாக சாலை பயன்பாடு மற்றும் பாதுகாப்பற்ற நடைமுறைகள் காரணமாகவே பெரும்பாலான சாலை விபத்துகள் நிகழ்வதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், பாதசாரிகளின் பாதுகாப்பு, சாலையைக் கடக்கும் முறைகள், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவதன் அவசியம், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் பயன்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.

ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் நிறைவில், போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பதோடு, சமூகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வைப் பரப்ப மாணவா்கள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனா். மாணவா்களிடையே பொறுப்பான சாலைப் பயன்பாட்டை உருவாக்கி விபத்துகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் தொடா்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.