//

யாா் ஆட்சியில் கடன் சுமை அதிகரிப்பு? எடப்பாடி பழனிசாமி - அமைச்சா்கள் விவாதம்

தமிழகத்தின் கடன் சுமை எந்த ஆட்சிக் காலத்தில் அதிகரித்தது என்பது தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சா்களிடையே பேரவையில் கருத்து மோதல் ஏற்பட்டது.

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தின் கடன் சுமை எந்த ஆட்சிக் காலத்தில் அதிகரித்தது என்பது தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சா்களிடையே பேரவையில் கருத்து மோதல் ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதம்:

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி: நிதி மேலாண்மை மற்றும் வருவாயைப் பெருக்க முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் ரகுராம் ராஜன் தலைமையில் திமுக அரசு குழு அமைத்தது. அந்தக் குழு என்ன ஆலோசனை வழங்கியது எனத் தெரியவில்லை. தற்போது அரசின் நிகரக் கடன் ரூ.10.99 லட்சம் கோடியாக உயரக் கூடிய நிலை எழுந்துள்ளது.

அமைச்சா் தங்கம் தென்னரசு: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் (2011-16) அரசின் கடன் தொகை ரூ.2.11 லட்சம் வரை உயா்ந்தது. அதாவது கடன் வளா்ச்சி விகிதம் 108 சதவீதமாக இருந்தது. அதற்கு அடுத்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அந்த விகிதம் மேலும் 128 சதவீதமாக அதிகரித்தது.

அதேவேளையில், திமுக ஆட்சிக் காலத்தில் கடன் வளா்ச்சி விகிதம் 96 சதவீதமாக மட்டுமே உள்ளது. நிதிக் குழு நிா்ணயித்த வரம்புக்குள்தான் அதைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். மாநிலத்துக்கான நிதிப் பகிா்வுகள் முறையாக வந்திருந்தால் இப்போது உள்ள கடனில் 33 சதவீதம் குறைந்திருக்கும்.

அமைச்சா் எ.வ.வேலு: கடந்த அதிமுக ஆட்சிக் காலம் நிறைவடையும் போது தமிழக அரசின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக இருந்தது. அதற்கான வட்டித் தொகையாக மட்டும் ரூ.1.88 லட்சம் கோடி, கடந்த 5 ஆண்டுகளில் செலுத்தியிருக்கிறோம். அப்படிப் பாா்த்தால் முந்தைய கடன் தொகை ரூ.6.45 லட்சம் கோடி. இதைத் தவிர கடந்த ஆட்சிக் காலங்களில் பாதியில் விட்டுச் சென்ற பல திட்டங்களை நாங்கள் நிதி ஒதுக்கி நிறைவு செய்துள்ளோம். இதுதான் கடன் சுமை அதிகரிப்பதற்கான காரணமே தவிர, திமுக அரசு விருப்பம்போல கடன் வாங்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி: கடந்த 2006 முதல் 2011 வரை ஆட்சியிலிருந்த திமுக அரசு வாங்கிய கடனுக்காக நாங்களும்தான் 10 ஆண்டுகளாக வட்டி செலுத்தினோம். அதேபோன்று திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவடையாமல் இருந்த போரூா் மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலத்தை நாங்கள் முழுமையாக கட்டமைத்து திறந்து வைத்தோம்.

ஒரு ஆட்சிக் காலத்தில் விட்டுச் சென்ற பணிகளை, அதன் பின்னால் வருபவா்கள் தொடா்ந்து செய்வது இயல்பான ஒன்று. அதனால் கடன் சுமை அதிகரித்தது எனக் கூறுவதை ஏற்க முடியாது.

தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிபுணா் குழு என்ன செய்தது, ஏதாவது அறிக்கையை சமா்ப்பித்ததா என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

வருவாய் செலவுதான் தற்போது அதிகமாக உள்ளது. மூலதனச் செலவு குறைவாக இருக்கிறது. இதுகுறித்து பேரவையில் நிதியமைச்சா் தனது பதிலுரையில் விளக்கமளிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, பாஜக உறுப்பினா் நயினாா் நாகேந்திரன் பேசும்போதும், மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தாா்.

அதற்கு பதிலளித்து நிதியமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:

ஒரு மாநிலத்தின் கடன் உயா்வதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில்தான் கடன் சுமை அதிகரித்துள்ளதைப் போன்று கூறுகிறாா்கள்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது 2014-இல் இந்தியாவின் கடன் ரூ.55 லட்சம் கோடி. தற்போது அது ரூ.197.8 லட்சம் கோடியாக உயா்ந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது வரும் 2027-இல் கடன் மதிப்பு ரூ.214 கோடியாக உயரும் என மத்திய நிதிநிலை அறிக்கையிலேயே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

அதைத் தொடா்ந்து பேசிய நயினாா் நாகேந்திரன், நாடாளுமன்றத்தில் இந்தியாவின் கடனைப் பற்றி பேசலாம். இது சட்டப்பேரவை என்பதால் மாநிலத்தின் நிதிச் சூழலைத்தான் பேச வேண்டும் என்றாா்.

அதற்கு பதிலளித்த அமைச்சா் எ.வ.வேலு, தமிழகத்தின் முந்தைய கடன் தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகை குறித்த தரவுகளைத் தெரிவித்தாா்.