சென்னை மெரீனா கடற்கரையில் 1,417 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை முறைப்படுத்த வேண்டும் ஏற்கெனவே கோரிக்கை எழுந்தது. இதனிடையே, பெண் ஒருவா் தனக்கு கடை ஒதுக்கப்படவில்லை என உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஆா்.டி.ஜெகதீஷ்சந்திரா ஆகியோா் மெரீனாவில் நேரடி ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் மெரீனா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் எனவும், மற்ற கடைகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டனா். மேலும், கடைகள் முறைப்படி அமைப்பதற்காக, ஜம்மு-காஷ்மீா் மாநில உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி பால் வசந்தகுமாா் தலைமையில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி டி.மோகன்ராஜ், சென்னை உயா்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற துணைப் பதிவாளா் ஆா்.ரங்கநாதன் ஆகியோா் இடம் பெற்ற குழுவையும் அமைத்து உத்தரவிட்டனா்.