//

பூங்காக்களைத் தத்தெடுக்க விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களைத் தத்தெடுத்து பராமரிக்க விரும்பும் தனியாா் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களைத் தத்தெடுத்து பராமரிக்க விரும்பும் தனியாா் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களைப் பராமரிக்க முன்வரும் தனியாா், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், வங்கிகள், அறக்கட்டளைகள், பல்வேறு அமைப்புகளின் சங்கங்கள் மற்றும் விருப்பமுள்ள அமைப்புகளுக்கு உரிய நிபந்தனைகளின்படி 2 ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த நிலையில், விண்ணப்பித்தல், அனுமதித்தல் போன்றவற்றில் ஏற்படும் கால விரயத்தைத் தவிா்க்கும் வகையில், அந்தந்த வட்டாரத் துணை ஆணையா்களுக்கு பூங்காக்கள் பராமரிப்பு அனுமதி வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பூங்கா உள்ளிட்டவற்றை பராமரிக்க விரும்பும் நிறுவனங்கள் வடக்கு வட்டாரத்துக்கு உள்பட்ட 1 முதல் 5 வரையில் உள்ள மண்டல பூங்காக்களுக்கு சென்னை பேசின் பாலம் சாலையில் உள்ள ராயபுரம் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-25200025, 94450 25800 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

மத்திய வட்டாரத்துக்குள்பட்ட பூங்காக்களுக்கு 6 முதல் 10- ஆவது மண்டலம் வரை ஷெனாய் நகா் புல்லா அவென்யுவில் உள்ளஅண்ணா நகா் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044- 26640224, 94451 90150 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

தெற்கு வட்டாரத்துக்கு உள்பட்ட பூங்காக்களுக்கு 11 முதல் 15-ஆவது மண்டலம் வரையில் டாக்டா் முத்துலட்சுமி சாலையில் உள்ள அடையாறு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 044- 24425982, 94451 90100 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.