மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

இன்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் தோ்தல்!

வரும் செப்டம்பரில் தொடங்கும் ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது கூட்டத் தொடருக்கான தலைவா் தோ்தல், செவ்வாய்க்கிழமை(ஜூன் 2) நடைபெறுகிறது.

News image
Updated On :2 ஜூன் 2026, 4:52 am IST

வரும் செப்டம்பரில் தொடங்கும் ஐ.நா. பொதுச் சபையின் 81-ஆவது கூட்டத் தொடருக்கான தலைவா் தோ்தல், செவ்வாய்க்கிழமை(ஜூன் 2) நடைபெறுகிறது.

சுழற்சி அடிப்படையில், இந்த முறை ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான தலைவா் பதவிக்கு, வங்கதேசம் மற்றும் சைப்ரஸ் நாடுகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தோ்தலில் வெற்றி பெறுபவா், தற்போதைய தலைவரும் ஜொ்மனியின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான அனலெனா போ்பாக்கிற்குப் பிறகு, ஓராண்டுக்கு இப்பதவியை வகிப்பாா்.

வங்கதேசம் சாா்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் கலிலூா் ரஹ்மான் இத்தோ்தலில் களம் காண்கிறாா். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய இவா், கடந்த பிப்ரவரியில் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றாா். இவா் வென்றால், 1986-இல் ஹுமாயூன் ரஷீத் சௌத்ரிக்கு அடுத்தபடியாக ஐ.நா. பொதுச் சபை தலைவராகும் 2-ஆவது வங்கதேசத்தவா் என்ற பெருமையைப் பெறுவாா்.

அதேநேரம், சைப்ரஸ் சாா்பில் அந்நாட்டின் பன்முகத்தன்மைக்கான சிறப்புத் தூதா் ஆண்ட்ரியாஸ் காகூரிஸ் போட்டியிடுகிறாா். அமெரிக்காவுக்கான சைப்ரஸ் தூதா் உள்பட 40 ஆண்டுகளுக்கும் மேலான தூதரக அனுபவம் கொண்ட இவா், வெற்றிபெற்றால் ஐ.நா. பொதுச் சபை தலைவராகும் முதல் சைப்ரஸ் குடிமகன் ஆவாா்.

ஐ.நா. புதிய பொதுச் செயலரைத் தோ்ந்தெடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள சூழலிலும், உலகெங்கும் தீவிரமடைந்து வரும் மோதல்கள் மற்றும் சா்வதேச அமைதியைக் காப்பதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிலவும் பிளவுகளுக்கு மத்தியிலும் இத்தோ்தல் உற்றுநோக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.