/

வங்கதேசம்: பள்ளியில் விழுந்த போர் விமானம் - 19 பேர் பலி; 50 பேர் காயம்

கல்வி நிலைய வளாகத்தில் போர் விமானம் விழுந்ததில், 19 பேர் பலியாகினர்; 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

News image
பள்ளி வளாகத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள்- AP
Updated On :21 ஜூலை 2025, 11:59 am

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம், பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் - 7 பிஜிஐ என்ற போர் விமானம், இன்று (ஜூலை 21) பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

தலைநகரான டாக்காவிற்கு வடக்கே உள்ள உத்தரா பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது பிற்பகல் 2.03 மணிக்கு அங்கிருந்த மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் உடனடியாக தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் பற்றிய தீயைக் கட்டுக்குள்கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில், பள்ளி மாணவர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக டாக்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தின் ராணுவ மக்கள் தொடர்புத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்துக்குள்ளான எஃப் - 7 பிஜிஐ என்ற போர் விமானம் விமானப் படைக்குச் சொந்தமானது என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணைக்குப் பிறகே தெரியவரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Bangladesh Air Force jet crashes 19 people killed, 50 injured as air force training aircraft crashes into college campus in Dhaka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.