ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி!
மண், நீர், தீ, வளி, வான் என்ற ஐந்து சக்திகளால் இறைவன் காட்சி தரும் தலங்கள் பஞ்ச பூத தலங்களாகும்.


மண், நீர், தீ, வளி, வான் என்ற ஐந்து சக்திகளால் இறைவன் காட்சி தரும் தலங்கள் பஞ்ச பூதத் தலங்களாகும். அவை காஞ்சிபுரம், திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் ஆகியனவாகும்.
திருவண்ணாமலையில் ஜோதி வடிவாக இறைவன் காட்சி தருகிறார். "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி', "மாலறியா நான்முகனுங் காணா மலை', "போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்' என்றெல்லாம் மாணிக்கவாசகர் போற்றுகிறார்.
திருமாலும் பிரம்மாவும் தங்களில் யார் உயர்ந்தவர் என்பதை அறிய சிவனிடம் செல்கின்றனர். "தனது முடியையும், திருவடியையும் யார் காண்கிறார்களோ அவர்களே உயர்ந்தவர்' என்று கூறி ஜோதி வடிவாக இறைவன் காட்சி தருகிறார். திருமால் பன்றி வடிவம் எடுத்து நிலத்தை அகழ்ந்து செல்கிறார். பிரம்மா அன்னப்பறவை வடிவம் கொண்டு முடியைக் காணச் செல்கிறார்.
இறுதியில் இருவரும் தமது தோல்வியை ஒப்புக்கொண்டு சிவனைப் போற்றி வணங்குகின்றனர். "ஜோதி' வடிவாக காட்சி அளித்த இறைவன் சிற்ப வடிவில் "லிங்கோத்பவ மூர்த்தி' என அழைக்கப்படுகிறார். கோயில்களில் கருவறையின் பின்புறம் உள்ள தேவகோட்டத்திலும் இவ்வடிவைக் கண்டு வழிபடலாம். இதனை "அழலாகிய அண்ணல்', "தீயுருவாகி நின்ற நிமலன்', "தேடிக்காணார் திருமால் பிரமன் தேவர் பெருமானை, "வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும் விளங்கிய நான்முகனும் சூழ எங்கும் தேட ஆங்கோர் சோதியுளாகி நின்றாய்' என்றெல்லாம் திருமுறைகள் போற்றுகின்றன.
இறைவன் ஒளிவடிவமாகக் காட்சி தந்த மலையே இறை வடிவமாகப் போற்றப்படுகிறது. இம்மலை அருணாசலம், அருணை, சோணாசலம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. அருணாசலம் என்றால் "அருள் வழங்கும் மலை' என்பது பொருளாகும்.
தேவாரம், திருவாசகம், திருப்புகழ், அருணகிரிப் புராணம், அருணாசலபுராணம், திருஅருணைக்கலம்பகம், திருஅண்ணாமலைக்கோவை, சோணசைல மாலை, அண்ணாமலை சதகம், அருணாசல அட்சரமாலை, உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ், கார்த்திகைத்தீப வெண்பா போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்களில் இத்தலத்தின் பெருமை பேசப்படுகிறது.
"திருவாரூரில் பிறந்தவர்கள், காசியில் இறந்தவர்கள், சிதம்பரம் தலத்தைத் தரிசித்தவர்கள் முக்தியை அடைவார்கள்' எனக் கூறப்படுகிறது. ஆனால், திருவண்ணாமலையோ "நினைத்தாலே முக்தி தரும் தலம்' ஆன்மிகப் பெரியோர்கள் பலர் இறையருள் பெற்ற புனித பூமியாக திருவண்ணாமலை விளங்குகிறது.
"ஆடிப்பாடி அண்ணாமலை கைதொழ ஓடிப்போம் நமதுள்ள வினைகளே' என அப்பரும், "அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே' என ஞானசம்பந்தரும் இத்தலத்தைப் போற்றுகின்றனர்.
இங்கு மலையே இறைவனின் வடிவமாகக் காட்சி தருவதால் மலையைச் சுற்றி கிரிவலம் வருவது சிறப்பாகும்.
ஞாயிறு}சிவபதம். திங்கள் - (பெளர்ணமி நாளாக இருந்தால் மேலும் சிறப்பு) - இறையருள் - ஆற்றல் கிடைக்கும். செவ்வாய் - எண்ணிய எண்ணம் நிறைவேறும். புதன் - அறிவுக் கூர்மை, வியாழன் - நல்ல வளம், எண்ணம் பெறுதல், வெள்ளி} அன்பும் இன்பமும் நிகழும். சனிக்கிழமை நவகிரகங்களை வழிபட்ட பலன் என ஒவ்வொரு கிழமைக்கும் பலன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகைத் தீபத் திருவிழா மிகவும் சிறப்பானது. கார்த்திகை மாதத்தின் பெüர்ணமி நாளில், கார்த்திகை நட்சத்திரத்தன்று தீபம் மலை உச்சியில் ஏற்றப்படும். இறைவன் ஜோதி வடிவாகக் காட்சி அளித்ததை எடுத்துக்காட்டும் வகையில் இத்தீபத் திருவிழா நடைபெறுகிறது.
இத்திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வந்திருக்க வேண்டும். கோயிலில் காணப்படும் முதலாம் ராஜேந்திர சோழன் கால கல்வெட்டில் திருவண்ணாமலை உடையார் கார்த்திகைத் திருநாளில் திருவேட்டை எழுந்தருளவும், அகல் விளக்குகள் ஏற்றவும், திருவிழாவுக்கு வரும் அடியார்களுக்கு அமுது வழங்கவும் தானம் வழங்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
கார்த்திகைத் தீபத்தைக் கண்டு வழிபட்டவர்களுக்கு அகத்திருள் அகன்றது, உலகம் முழுமைக்கும் ஒளிவிளக்காகவும் விளங்குகிறது என்று சிவப்பிரகாச சுவாமிகள் கூறுகிறார்.
"அண்ணாமலைக்கு அரோகரா' என்று பக்தர்கள் பக்தியுடன் அழைத்து வணங்குகின்றனர். துன்பங்கள் அகலவும், வாழ்க்கை ஒளிமயமாக விளங்கவும் இல்லங்களிலும், கோயில்களிலும் தீபம் ஏற்றி வழிபடுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...