இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

தெய்வானையை மணம் கொண்ட தேவசேனாதிபதி!

ஒருசமயம் திருமால் யோக நிலையில் இருந்தவாறு சிவனின் ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசித்தபோது,  ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:40 am

தினமணி

ஒருசமயம் திருமால் யோக நிலையில் இருந்தவாறு சிவனின் ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசித்தபோது,  ஆனந்தக் கண்ணீர் பெருகியது.  அந்தத் துளிகள் மகாலட்சுமியின் அருளுடன் இரு பெண்களாக வடிவு கொண்டன.   திருமாலும், மகாலட்சுமியும் அவர்களைத் தங்களது குமாரத்திகளாக ஏற்று அமுதவல்லி, சுந்தரவல்லி என்று பெயர் சூட்டி, வளர்த்து வந்தனர்.

இருவரும் ஸ்ரீ முருகனை நோக்கித் தவம் செய்தனர். தவத்தில் மகிழ்ந்த முருகன் அவர்களது முன் தோன்றி,  அவர்கள் விரும்பும் வண்ணம் திருமணம் புரிவதாகவும், அதன் பொருட்டு சுந்தரவல்லியை மண்ணுலகிலும், அமுதவல்லியைத் தேவருலகிலும் பிறக்க அருளினார். அதன்படியே சுந்தரவல்லி வள்ளியாக பூவுலகிலும், அமுதவல்லி தெய்வானையாக விண்ணுலகிலும் பிறந்து முருகனை மணந்தனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

அமுதவல்லி, இந்திர உலகத்தை அடைந்து அங்கிருந்த பொய்கையில் மலர்ந்திருந்த நீலோற்பல மலரில் குழந்தையாகத் தோன்ற, தேவேந்திரனும், இந்திராணியும் அவளைக் கண்டெடுத்து மகளாக வளர்த்தனர். கற்பக விருட்சத்தின் கீழே காமவல்லியால் கட்டப்பட்ட தங்கத் தொட்டிலில் ஐராவதம் எனும் யானையால் வளர்க்கப்பட்டமையால் அவள் தெய்வானை என்று அழைக்கப்பட்டாள். இவளுக்கு குஞ்சரி என்ற பெயரும் உண்டு.  அருணகிரிநாதர் திருப்புகழில் முருகனை "குஞ்சரி மணவாளா' என்று அழைக்கிறார்.

பிரம்மதேவனின் மானச புத்ரியாக விளங்கும் சஷ்டிதேவி, தெய்வயானையின் அம்சமாக அவதரித்தவளாவாள். குழந்தை இல்லாதவர்கள் சஷ்டி விரதத்தை அனுசரிப்பார்கள். சகல சம்பத்தையும் அருள்பவள் தெய்வானை. அதனால் இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். தேவசேனா என்றும் அழைப்பர்.
சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்து, அன்னையிடம் வேல் பெற்று, வீறு கொண்டெழுந்த சூரபத்மனையும் அவனது அசுரகுலத்தையும் வேரோடு சாய்த்து, தேவர்களின் துயர் துடைத்தான் முருகன். 

பிரம்மனிடம் வரம் பெற்று, போரில் பற்பல மாயங்கள் புரிந்த சூரபத்மன், முருகனிடமிருந்து தப்பிப்பதற்காக கடலின் நடுவே ஒரு மாமரமாகத் தோன்றியபோது, அந்த மரத்தை முருகன் தன் வேலால் இரு கூறுகளாகப் பிளந்து, மயிலாகவும், சேவலாகவும் மாற்றி மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். சூரனால் சிறைவைக்கப்பட்ட தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்தார். விடுதலை பெற்ற தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தேவர்களின் துன்பம் களைந்த ஸ்ரீகந்தப் பெருமானுக்கு தன் மகளான தெய்வானையை மணமுடிக்க தேவேந்திரன் விரும்பினார். அதைக்கேட்டு முருகன் நகைத்தவாறே, ""இந்திரா! உன் விருப்பத்தை மகிழ்ச்சியோடு நிறைவேற்றி வைப்பேன். முன்னரே,தெய்வானை என்னை மணக்க வேண்டி சரவணப் பொய்கையில் தவம் புரிந்துள்ளாள். பங்குனியும் உத்திரமும் சேர்ந்த சுப தினத்தில் அவளைக் கரம் பிடிப்பேன்''  என்று அனுகிரகித்தார். முத்துக்குமரன் தெய்வானையை மணந்திட இசைவு தந்ததும், திருமணப் பணிகள் சோழ மன்னனாகிய முகுந்தனது தலைமையில் நடைபெற்றன. திருப்பரங்குன்றமே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது.  
அழகான பந்தலின் நடுவே நவரத்தினங்களைக் கொண்டு இழைக்கப்பட்ட திருமண மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது.  பூவுலகில் உள்ள எல்லா மன்னர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. 

தெய்வானையின் நாயகன் இரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்க, தென்னவர்கோன் சிவன் தனது இல்லாள் உமையம்மையோடு எழுந்தருளித் திருமணத்தை முன்நின்று நடத்தி வைக்க வந்தார். உமாதேவியார் தனது திருக்குமாரனை உச்சி முகர்ந்து மனம் குளிர்ந்தாள்.  சிவன் மிகுந்த ஆனந்தமடைந்து, திருமணச் சடங்குகள் உரிய காலத்தில் நடைபெறுக என ஆணையிட, பிரம்மன் விவாகச் சடங்குகளை முறைப்படி இயற்ற, பார்வதி பரமேஸ்வரர் மனம் மகிழ, தேவேந்திரன் தாரை நீர்வார்க்க, முருகன் தெய்வானைக்கு மங்கல நாண் பூட்டி, தேவசேனாதிபதி 
திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணம் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திரத்தன்று நடைபெற்றது. சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கே திறக்கப்பட்டு பூஜைகள் 
நடைபெறும். 

ரஞ்சனா பாலசுப்ரமணியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.