/

உறவோடு  உறவாடு!

உறவினர்களோடு  உறவாடுவது  குடும்பத்தின்  ஒற்றுமைக்கு  வித்திடும்.  குடும்ப ஒற்றுமை  சமுதாயத்திற்கு  வலுவூட்டும். வலுவான  சமுதாயம் நாட்டின்   வலிமையைப் பெருக்கும்.  வலிமையான  நாடு உலகில் உயர்ந்து நிற்கு

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:44 am

மு. அ. அபுல் அமீன்

உறவினர்களோடு  உறவாடுவது  குடும்பத்தின்  ஒற்றுமைக்கு  வித்திடும்.  குடும்ப ஒற்றுமை  சமுதாயத்திற்கு  வலுவூட்டும். வலுவான  சமுதாயம் நாட்டின்   வலிமையைப் பெருக்கும்.  வலிமையான  நாடு உலகில் உயர்ந்து நிற்கும்.

மனிதர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சி  ரத்த கலப்பு உறவினர்களிடம்  அன்பாக நடந்திட  நவின்று அல்லாஹ்  கவனித்து  கொண்டிருப்பதையும்  புவனவாசிகளுக்குப்  புகல்கிறது  புர்கானின் 4-1  ஆவது வசனம்.

இதனை உறுதிப்படுத்தி  இறுதி நபி (ஸல்)  அவர்கள் நற்செயல்களில் அல்லாஹ்விற்கு  நம்புவது  அடுத்து  ரத்த வழி  உறவினர்களோடு  சேர்ந்து  வாழ்வது  என்று விளக்கம்  அளித்தார்கள். 

ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவானது  மனித  இனம்.  அதனால்  மனித இனத்தில்  ஒருவருக்கொருவர் ரத்த கலப்புள்ள  உறவினரே. அல்லாஹ்வையும் மறுமை  நாளையும்  நம்புவோர்  ரத்தவழி உறவினர்களோடு சேர்ந்து வாழ  செம்மல்  நபி ( ஸல்) அவர்கள் செம்பியதைப் புகாரி 5673-இல் காணலாம்.

உறவினர்களோடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் இணக்கமாக  இருப்பது. தொடர்ந்து  தொடர்பில்  இருப்பது. அவ்வப் பொழுது  அவர்களின் நிலைமைகளை நிதானமாக  கேட்பது.  அவர்கள்  நெருக்கடியில்  இருந்தால் ஆறுதல்  கூறுவது.  நெருக்கடி நீங்க  ஆவன  செய்வது.  துன்ப  துயரங்களைக் குறைப்பது. நோயுற்று  இருந்தால்  உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு  செய்வது.  உடன் இருந்து  உதவுவது.   ரத்த கலப்புள்ள  உறவினரின்  உரிமைகளைப்  பேணாமல் புறக்கணிப்பவர்  புக மாட்டார்  சொர்க்கம்  என்று சாந்த நபி (ஸல்)  அவர்கள் அறிவித்ததை  ஜுபைர் பின் முத்இம்  (ரலி)  மொழிவது  புகாரி,  முஸ்லிம் நூல்களில்  உள்ளது.  

பொருள்  பெருகி சிறப்புற  வாழ எண்ணுவோர்   எண்ணம் நிறைவேற  ஈட்டிய செல்வம்  நிலைக்க ரத்த கலப்புள்ள  உறவினரை  ஆதரித்து  உதவ வேண்டும் என்று  உத்தம  நபி (ஸல்)  அவர்கள்  உரைத்ததை  அறிவிக்கிறார். அனஸ் (ரலி) நூல் புகாரி,  முஸ்லிம்.

உறவினர்களைச் சந்திக்கும்  பொழுது  முதலில்  முகமன்  கூறி உறவை உறுதியாக்க  வேண்டும் என்று  உத்தம நபி ( ஸல்)  அவர்கள்  உரைத்தது பைஹக்கீ 20/ 8 இல்  உள்ளது.  உறவுகளோடு  உறவாடும்  உறுதி  குடும்ப  உறவை வலுப்படுத்தும். அந்த  வலுவான  குடும்பத்திற்குச் சமுதாயத்தில்  உயரிய மதிப்பும்  மரியாதையும்  கிடைக்கும்.

பரம்பரையைத் தெரிவித்து ரத்தவழி  உறவுகளைப்  பேண பிள்ளைகளுக்கும் கற்று கொடுக்க  வேண்டும்.  பிள்ளைகளுக்கு  உறவை  அறிவித்து  தெரிவித்து அறிமுகப்படுத்தி  அவர்களின்  இணக்கத்திற்கு ஆர்வம்  ஊட்ட  வேண்டும்.  உறவோடு  உறவாடி  உள்ளம் மகிழ  உலகில்  வாழலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.