/

இந்துமத அற்புதங்கள் 52: உணவிட்டு உடன் வந்த தோழன்

திருச்சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை ஆகிய திருத்தலங்களுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திருப்பைஞ்ஞீலி....

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:41 am

டாக்டா் சுதா சேஷய்யன்

திருச்சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை ஆகிய திருத்தலங்களுக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திருப்பைஞ்ஞீலி என்னும் தலம் நோக்கிச் சென்றார் திருநாவுக்கரசர். போகும் வழியோ தனிவழி. களைப்பு, பசி, தாகம் இருப்பினும் திருப்பைஞ்ஞீலி செல்வதையே குறிக்கோளாகக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

பசியும் தாகமும் அதிகரித்தது. இருப்பினும் சிவபெருமானையே சிந்தித்துக் கொண்டு நடக்கலானார். பக்தன் பாடுபடுவதைப் பார்த்துக்கொண்டு பரமனால் பேசாமல் இருக்க முடியுமா?

நாவுக்கரசர் நடந்து வரும் வழியில், ஒரு சிறுகுளம் உருவாக்கி, அதன் கரையில் பொதிசோறு கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார் சிவபெருமான்.  நாவுக்கரசர் அத்தடாகத்தின் அருகாமையில் வந்தவுடன், அந்தணர் வேடத்தில் உட்கார்ந்திருந்த ஆண்டவன், ""பெரியவர் களைத்துப் போய் வந்திருக்கிறீர்கள். என்னிடம் சோறு இருக்கிறது. சாப்பிடுங்கள். சாப்பிட்டு விட்டுத் தடாகத்தில் தாகம் தீர்த்துக் கொள்ளுங்கள். தங்கி இளைப்பாறிவிட்டுப் போங்கள்'' என்று அழைத்தார்.

நாவுக்கரசரும் அங்கு நின்று உணவுண்டு நீர் அருந்திக் களைப்பாறினார். அந்தணர் அவரைப் பார்த்து, "எங்கு போகப் போகிறீர்கள்?'' என்று கேட்டார். ""திருப்பைஞ்ஞீலிக்குச் செல்கிறேன்'' என்று சொன்னவரிடம் ""நானும் அங்குதான் போகிறேன்'' என்று கூறித் தன் மூட்டையைக் கட்டிக்கொண்டு கூடவே வந்தார் அந்தணர்.

திருப்பைஞ்ஞீலி அடைந்ததும் திரும்பிப் பார்த்தால் உடன் போந்தவரைக் காணோம்.

எப்படி இருப்பார்?

பசிக்கு உணவு தந்து, களைப்புக்கு உற்சாகம் தந்து, வழித்துணையாய் வந்திடத்தானே சிவபெருமான் சித்தம் கொண்டார்! உணவு தந்தார்; துணையாய் வந்தார்.

தோன்றிய துணையாயும், உடன்வந்த தோன்றா துணைவன் கொண்டு வந்துவிட திருப்பைஞ்ஞீலியில் திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

"உடையர் கோவணம் ஒன்றுங் குறைவிலர்

படைகாள் பாரிடஞபு சூழ்ந்த பைஞ்ஞீலியார்

சடையிற் கங்கை தரித்த சதுரரை

அடைய வல்லவர்க் கில்லை அவலமே''.

திருப்பைஞ்ஞீலி தலத்தினைச் சென்றடையும் வழி:

திருச்சியிலிருந்து பேருந்து செல்கிறது. திருச்சியிலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக இத்தலத்தை அடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். திருப்பைங்கிளி என்பது இப்போதைய பெயர்.

இறைவன் - நீலகண்டேஸ்வரர், ஞீலிவனநாதர், கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர்

இறைவி - விசாலாட்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.