இந்துமத அற்புதங்கள் 52 - பசி தீர்த்த பரமன்
சீர்காழியிலிருந்து குருகாவூர் என்னும் ஊர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார் சுந்தரர்


சீர்காழியிலிருந்து குருகாவூர் என்னும் ஊர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார் சுந்தரர். அவருடன்கூட இன்னும் பலரும் சென்றனர். அப்படிச் செல்லுங்கால், எல்லோரும் பசியாலும் தாகத்தாலும் வருந்தினார்கள். களைப்பும் வருத்தமும் மிக தட்டுத் தடுமாறி வழிநடந்து கொண்டிருந்த அவர்கள், திடீரென்று எதிரில் ஓர் அழகான நிழல் பந்தல் வேய்ந்திருப்பதையும் அங்கே ஓர் அந்தணர் நிற்பதையும் கண்டார்கள்.
வெயிலில் நீண்ட தூரம் நடந்து வாடியிருந்த அவர்களுக்கு நிழலைப் பார்த்ததும் மகிழ்ச்சியும் அமைதியும் பொங்கின. ஓடிச் சென்று நிழலில் நின்றனர். அந்தணர் மெல்லச் சுந்தரரைப் பார்த்து, "நீங்கள் அனைவரும் களைத்துப் பசியால் வாடியிருக்கிறீர்கள். நிறைய உணவிருக்கிறது. எல்லோரும் உண்ணுங்கள்'' என்று கூறி உணவும் நீரும் கொடுத்தார்.
வழி நடந்த களைப்புடன் உண்ட களைப்பும் சேர, எல்லோரும் உணவுக்குப் பின் உறங்கிப் போயினர். நன்கு உறங்கி விழித்தெழுந்து பார்த்தால், பந்தலும் இல்லை; பாத்திரமும் இல்லை; படைத்த அந்தணப் பெரியவரும் இல்லை. குருகாவூர் இறைவனே, அடியார்களின் பசி தீர்க்கப் பொதி சோறு கொண்டு வந்த விந்தையை என்னென்பது!
திருக்குருகாவூரில் பொதிசோறு பெற்றபின் சுந்தரர் அருளிச் செய்த பதிகம்
"இத்தனை யாமாற்றை
அறிந்திலேன் எம்பெருமான்
பித்தரே என்றும்மைப்
பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை
மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.''
திருக்குருகாவூர் தலத்தினைச் சென்றடையும் வழி:
சீர்காழியிலிருந்து தென் திருமுல்லைவாயில் செல்லும் சாலையில் 6-ஆவது கி.மீ.இல் வடகால் என்னும் ஊரில், சாலையில் குருகாவூருக்குச் செல்லும் பாதை பிரிகின்றது. (வழிகாட்டிப் பலகையும் உள்ளது) அப்பாதையில் சென்றால் 1 கி.மீ.இல் குருகாவூரை அடையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...