/

கீர்கிராமம் யோகாத்யா

மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் நகருக்கு வடக்கே 35 கி.மீ தொலைவில் உள்ளது கீர் கிராமம்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:07 pm

அ.கு. பார்வதி

மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் நகருக்கு வடக்கே 35 கி.மீ தொலைவில் உள்ளது கீர் கிராமம். இங்கே அமைந்துள்ளது அன்னை யோகாத்யாதேவியின் ஆலயம். அன்னையின் உடற்கூறுகளில் வலது குதி  கால் விழுந்த இடமாகக் கருதப்படும் இது, சக்தி பீடங்களில் 40வது பீடமாகத் திகழ்கின்றது. இந்த பீடத்தை அலங்கரிக்கும் அம்பிகை யோகாத்யா (பூததாத்ரி). தலத்தின் காவல் தெய்வமாகத் திகழும்  பைரவர் க்ஷீரகண்டர்.

பர்த்வான் - கடோவா ரயில் மார்கத்தில் இருக்கும் நிகம் எனும் ரயில் நிலையத்தில் இறங்கி மூன்றரை கி.மீ தொலைவு நடந்தால் கீர் கிராமத்தை அடையலாம். இந்த பீடேஸ்வரி பூததாத்ரி என்று  அழைக்கப்படுகிறார், சிலர் காளி என்றும் அழைக்கின்றனர். ஆனால் கருவறையில் காட்சி அளிக்கும் தேவி உருவை திரிபுர பைரவி என்பர்.

மகாவிஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரத்தின் போது அவருக்கு பரிபூர்ண சக்தியாக உதவியவள் திரிபுர பைரவிதானாம். பிரம்மதேவர், படைப்புத் தொழிலின் போது தவம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.  தபஸ் என்பது கிரியை ஆகிற செயலைக் குறிப்பதால், அதற்குரிய சக்தியை கிரியா சக்தி என்பர். இந்த கிரியா சக்திக்கு அதிபதியாக விளங்குபவள் திரிபுர பைரவி.

பூததாத்ரி என்றும், காளி மந்திர் என்றும் அழைக்கப்படும் இந்த தேவியின் ஆலயத்தில் மகர சங்கராந்தி அன்று நடைபெறும் திருவிழாவின்போது இங்கு பக்தர் கூட்டம் அலைமோதும். இந்த விழாவை  பைஷாக் சங்கராந்தி என்று கூறுகிறார்கள்.

பூததாத்ரி அன்னை, திரிபுர பைரவி உருவத்தில் இங்கே பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இங்கு வரும் மக்களின் இன்னல்களைப் போக்கும் அன்னையாக விளங்குகிறாள். இந்த தேவியை ஆராதித்தால்  தன லாபமும், சகல சம்பத்தும் ஏற்படும் என்பது உறுதி.

திரிபுர பைரவிதேவி, ஆயிரம் உதய சூரியன்களின் ஒளி கொண்டவள். முகத்தாமரையில் புன்சிரிப்பும், மூன்று கண்களும் உடையவள். சிவப்பு வண்ண மேலாடை, கபால மாலை, ரத்ன கிரீடம், சந்திர  கலை ஆகியவற்றைத் தரித்தவள். கைகளில் ஜபமாலையும், புத்தகமும், வர-அபய முத்திரைகளும் கொண்டு காட்சியளிக்கிறாள் யோகாத்யா தேவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.