/

அக்னிப் பிழம்பாக ஈசன்!

ஈசன் அக்னி உருவாகத் திகழ்வது திருவண்ணாமலைத் தலம் என்பது தெரியும். அது போல், தவமிருந்த அம்பிகைக்கு அக்னிப் பிழம்பாகவே ஈசன் காட்சி அளித்த தலம் ஒன்று உண்டு. அது தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இர

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:53 pm

அ.கு. பார்வதி

ஈசன் அக்னி உருவாகத் திகழ்வது திருவண்ணாமலைத் தலம் என்பது தெரியும். அது போல், தவமிருந்த அம்பிகைக்கு அக்னிப் பிழம்பாகவே ஈசன் காட்சி அளித்த தலம் ஒன்று உண்டு. அது தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள திருக்கானூர் தலம்.

ஒரு முறை அம்பிகை சிவபெருமானை நோக்கித் தவமிருக்க தகுந்த இடத்தைத் தேடினார். பூமியில் கரும்புகள் அதிகம் வளர்ந்திருந்த இக்ஷீவனம், தவத்துக்குத் தகுந்த இடமாகத் தோன்றியது. அங்கேயே அமர்ந்து தவமிருந்தார் அம்பிகை. தவத்தால் மகிழ்ந்த ஈசனோ அவருக்கு அக்னிப் பிழம்பாகவே காட்சி தந்தார்.

எனவே ஈசனுக்கு செம்மேனிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. தவத்தில் அமர்ந்த அம்பிகைக்கு சிவயோகநாயகி என்று பெயர். இங்கே வில்வம் தலவிருட்சம். "தெய்வம் வந்து தங்கும் அழகுடைய திருக்கானூர் சோலை வனம்' என சம்பந்தர் பதிகத்தில் பாடியுள்ளார். சித்தர்கள் இங்கே பாம்பு வடிவில் உலவுகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

குறிப்பாக, கணவன் - மனைவி ஒற்றுமைக்கு இந்தத் தலம் சிறப்பான ஒன்றாகத் திகழ்கிறது. இங்கே வந்து வழிபட்டால், தம்பதியர்க்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை இந்தத் தலத்து ஈசனும் அம்பிகையும் போக்கி வைப்பதாக ஐதீகம்.

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 3 கி.மீட்டரில் உள்ள விஷ்ணம்பேட்டையை அடைந்து, அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலத்துக்குச் செல்லலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.