/

மஹாலட்சுமி ஐஸ்வர்ய மகுடம் பெற்ற தலம்!

 திருச்சிக்கு அருகே முசிறியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளூர். இங்கே உள்ளது சிவகாமசுந்தரி சமேத திருக்காமேஸ்வரர் ஸ்ரீஐஸ்வர்ய மஹாலட்சுமி திருக்கோயில்.  ஒருமுறை தேவர்களும், அசுரர்களும் அமுதம்

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:05 pm

அ.கு. பார்வதி

 திருச்சிக்கு அருகே முசிறியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளூர். இங்கே உள்ளது சிவகாமசுந்தரி சமேத திருக்காமேஸ்வரர் ஸ்ரீஐஸ்வர்ய மஹாலட்சுமி திருக்கோயில்.

 ஒருமுறை தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அப்போது அமுதத்தை தேவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என மஹாவிஷ்ணு மோகினி வடிவெடுத்து அசுரர்களை மயக்கி லவண சமுத்திரம் எனும் உப்புக் கடலில் மயக்கித் தள்ளினார். ஸ்ரீவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தைக் கண்டு சிவபெருமான் மோகித்து மயங்கினார். அதனால் ஹரிஹர புத்திரன் உருவானார்.

 இதனால் மகாலட்சுமி, விஷ்ணுவிடம் கோபம் கொண்டு, வைகுண்டத்தை விட்டு வெளியேறினாள். இதற்குக் காரணமான சிவபெருமானிடம் நீதி கேட்க எண்ணம் அவளுக்கு. ஆனால், சிவபெருமான் காட்சி தராமையால் பூலோகத்தில் வில்வாரண்ய úக்ஷத்ரம் எனும் வெள்ளூரில் தவம் செய்யலானாள். யுகம் பல தவம் இருந்தும் சிவபெருமான் காட்சி தராமையால் தன்னை வில்வ மரமாகவே மாற்றிக்கொண்டு லிங்கத் திருமேனியில் வில்வ மழையாகப் பொழிந்து பூஜை செய்தாள்.

 இதனால் மகிழ்ந்த ஈசன் மஹாலட்சுமி முன்னர் தோன்றி ஹரிஹரபுத்ர அவதாரத்தின் நோக்கத்தை விளக்கி, மஹாலட்சுமியை சாந்தப்படுத்தினார். மேலும், ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்கிராமம் செய்து மஹாவிஷ்ணுவின் இதயத்தில் மஹாலட்சுமியை ஸ்தாபித்து மஹாலட்சுமியையும் விஷ்ணுவையும் சேர்த்து வைத்தார் சிவனார்.

 வில்வ மரமாகத் தோன்றி வில்வ மழை பொழிந்து சிவபூஜை செய்ததன் பலனாக இங்கே சிவனார் மஹாலட்சுமிக்கு ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து மஹாலட்சுமியை ஐஸ்வர்யத்துக்கு அதிபதியாக்கினார் என்கிறது இத்தலத்தின் புராணம். எனவேதான் வேறு எங்கும் காணாத வகையில் இங்கே வடமேற்குப் பகுதியில் மஹாலட்சுமி இருக்க வேண்டிய இடத்தில் வில்வமரமும், அதன் நிழலில் சிவலிங்கத்துடன் கூடிய ஸ்ரீவத்ஸமுத்திரை பதித்த ஐஸ்வர்ய மகுடத்துடன் தவம் செய்யும் கோலத்தில் கோயிலின் குபேர பாகத்தில் ஐஸ்வர்ய மஹாலட்சுமியும் அற்புதக் கோலம் கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றனர்.

 இத்தலத்தில் இறைவனுக்கு ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் பெயர். மஹாலட்சுமி ஐஸ்வர்யத்திற்கு அதிபதியான தலம். அதுபோல சுக்ரன் மற்றும் குபேரன் சிவபெருமானை வழிபட்டு சுக்ரன் போகத்துக்கு அதிபதியாகவும், குபேரன் தன அதிபதியாகவும் ஆனது இத்தலத்தில்தான் என்கிறது தலபுராணம்.

 இத்தலத்திற்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 60ஈ மேலவெள்ளூர் நகரப் பேருந்து காலை, மாலை வேளைகளில் செல்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.