எசாலத்தில் கும்பாபிஷேகம்!
சோழ மன்னர்களின் வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற எசாலம் திரிபுரசுந்தரி சமேத இராமநாத ஈசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற 10ஆம் தேதி நடக்கிறது. விழுப்புரம் வட்டத்தில், விழுப்புரம் - செஞ்சி செல்லும்


சோழ மன்னர்களின் வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற எசாலம் திரிபுரசுந்தரி சமேத இராமநாத ஈசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற 10ஆம் தேதி நடக்கிறது.
விழுப்புரம் வட்டத்தில், விழுப்புரம் - செஞ்சி செல்லும் சாலையில் நேமூர் என்ற ஊரிலிருந்து கிழக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது எசாலம். இவ்வூருக்கு அருகே பிரம்மதேசம், எண்ணாயிரம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்கள் அழகிய திருக்கோயில்களுடன் விளங்குகின்றன. மேலும் இவ்வூருக்கு அருகில் பல்லவர் கால குடைவரைக் கோயில்கள் மண்டகப்பட்டு, தளவானூர் ஆகிய ஊர்களில் உள்ளன. பல்லவர் கால ஓவியங்கள் உள்ள பனைமலை தாளகிரீசுவரர் கோயிலும் அருகே அமைந்து இப்பகுதி முழுவதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாய் விளங்குகிறது.
எசாலம் ஊரின் நடுவே திருக்கோயில் அழகிய கற்கோயிலாக விளங்குகிறது. முதலாம் ராஜேந்திர சோழனின் அரச குருவாக விளங்கிய சர்வ சிவ பண்டிதர் என்பவர் இக்கோயிலை எடுப்பித்தார் என்பதை இக்கோயிலில் காணும் கல்வெட்டால் அறிகிறோம். எசாலம் என்று அழைக்கப்படும் இவ்வூரின் பழைய பெயர் "எய்தார்' என்பதாகும். கல்வெட்டுகளிலும் இவ்வாறே குறிப்பிடப்படுகிறது.
கருவறையில் இராமநாத ஈசுவரர் லிங்க வடிவாக அருள்புரிகின்றார். கருவறையை அடுத்துள்ள மகாமண்டபத்தில் வடதிசையில் தெற்குநோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இறைவி திரிபுரசுந்தரி என அழைக்கப்படுகின்றாள். தனது நான்கு கரங்களில், மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய- வரத முத்திரை தாங்கியும் அருள்பாலிக்கின்றாள். திருமணத்தடை நீக்கும் அற்புதக் கோயிலாக இத்தலம் விளங்குகிறது.
இக்கோயிலில் 1987ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்பணியின்போது கோயில் வளாகத்தில் பூமிக்கடியிலிருந்து முதலாம் ராஜேந்திர சோழன் காலத்து செப்பேடுகளும், உற்ஸவத் திருமேனிகளும் கிடைத்தன. எசாலம் செப்பேடு, ராஜேந்திர சோழன் இக்கோயிலுக்கு அளித்த நிலக் கொடையைப் பற்றியும், சோழர் வரலாற்றை அறிந்து கொள்ளவும் பெரிதும் உதவுகிறது. இத்திருக்கோயில் பற்றிய கட்டுரை 22.4.2011ஆம் தேதியிட்ட தினமணி வெள்ளிமணி இதழில் வெளிவந்துள்ளது.
இக்கோயிலுக்கு முன்பு 1995ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தற்பொழுது ஊர் மக்கள் அறநிலையத்துறையுடன் இணைந்து இராமநாத ஈசுவரர் கோயிலுக்கும் மற்ற கிராமத்துக் கோயில்களுக்கும் வருகிற 10ஆம் தேதியன்று சிறப்புடன் கும்பாபிஷேகம் நடத்த உள்ளனர்.
வரலாற்றுச் சிறப்பும், வழிபாட்டுச் சிறப்பும் பெற்ற திரிபுரசுந்தரி சமேத இராமநாத ஈசுவரர் திருக்கோயில் சென்று வழிபடுவோம்! நலமடைவோம்!
மேலும் விவரங்கள் அறிய தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
9894739834.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...