சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இவளே உயிர்த்தோழி போலும்!

சங்க அக இலக்கியங்களில் தலைவிக்கும் தோழிக்கும் இடையே உள்ள நட்பை இல்பொருள் உவமையாக வெளிப்படுத்தும் பாடல்கள் உண்டு.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:29 pm

முனைவர் பு. இந்திராகாந்தி

சங்க அக இலக்கியங்களில் தலைவிக்கும் தோழிக்கும் இடையே உள்ள நட்பை இல்பொருள் உவமையாக வெளிப்படுத்தும் பாடல்கள் உண்டு. ஆனால், நட்பின் ஆழத்தை மிக வெளிப்படையாக வெளிப்படுத்தும் சிறைக்குடி ஆந்தையாரின் பாடல் ஒன்று நட்பின் உச்சத்தை உணர்த்துகிறது. இது தலைவன் கூற்றாக அமைந்த பாடல்.

""தலைப்புணைக் கொளினே, தலைப்புணைக் கொள்ளும்;

கடைப்புணைக் கொளினே, கடைப்புணைக் கொள்ளும்;

புணைகை விட்டுப் புனலோடு ஒழுகின்

ஆண்டும் வருகுவள் போலும் - மாண்ட

மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்

செவ்வெரித்து உறழும் கொழுங்கடை மழைக்கண்

துளிதலைத் தலைஇய தளிர்அன் னோளே!

(குறு.பா.222)

தலைவன் இயற்கைப் புணர்ச்சியின் பின் பிரிந்து செல்லுங்கால் தோழியரும் தலைவியும் புனல் விளையாடும் காட்சியைக் கண்ணுருகிறான். அவர்களுள் ஒருத்தி அங்கிருக்கும் தோழியருள் ஒருத்தியைப் பின்பற்றுகின்றாள். தெப்பத்தின் தலைப்பாகத்தைத் தோழி பிடித்தால் இவளும் அப்பாகத்தைப் பிடிக்கிறாள். அவள் தெப்பத்தின் கடைப்பகுதியைத் தழுவினால் இவளும் அதனையே தழுவ முந்துகிறாள். தோழி தெப்பத்தின் பிடி வழுவி நீருள் மூழ்கினால் இவளும் உடன் மூழ்குவாள் போலும்! இவள் யாரெனில், மாட்சிமையுடைய அழகு விளங்கும் மழைக்காலத்தில் மலரும் பிச்சிப்பூவைப் போன்ற செவ்வரி படர்ந்துள்ள குளிர்ச்சிமிக்க கண்களையுடைய, மழைத்துளிகள் பட்டதால் தளிர்த்த தளிர் போன்ற அழகுடைய தலைவியாவாள். ஆதலால், எத்தோழியின் செயல்களை இவள் பின்பற்றினாளோ அத்தோழியே தலைவியின் உயிர்த்தோழி ஆதல் வேண்டும் என்கிறான் தலைவன்.

சங்க காலத் தலைமகன் இவ்வாறுதான் தன் தலைவியின் உயிர்த்தோழியை அவர்களின் செயல்களைக் கொண்டே அடையாளம் கண்டிருக்கின்றனர் போலும்! தலைவிக்கும் உயிர்த் தோழிக்கும் இடையேயுள்ள நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துவதாகவே இப்பாடல் திகழ்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.