/

விவசாயி...

சிறு குழந்தை வயலில் நாற்று நடும் பணியைத் தொடங்கி வைத்த காணொளி சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலானது.

News image
Updated On :19 ஜூலை 2025, 6:35 pm

பொ.சோமன்

சிறு குழந்தை வயலில் நாற்று நடும் பணியைத் தொடங்கி வைத்த காணொளி சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலானது. அவர் அமெரிக்காவில் வசித்து வரும் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சிறுமி யக்ஷ்வினி.

நிகழ்வு குறித்து அவரது தந்தை கார்த்திக்கிடம் பேசியபோது:

'எங்கள் பூர்விகம் அம்பாசமுத்திரம்தான். ஐ.டி. நிறுவனப் வேலைக்காக, நான் எனது மனைவி சீதாலட்சுமியுடன் அமெரிக்காவில் வசிக்கிறேன். ஏழு வயதாகும் மகள் யக்ஷ்வினி, அமெரிக்காவில் இலிவொன்ஸ் பகுதியில் உள்ள ஒவென் தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறார். எப்போதும் களிமண் விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், உடற்பயிற்சி, பரதம், விவசாயம் போன்றவற்றை இணையத்தில் கானொளி மூலமாக பார்த்துகொண்டே இருப்பார்.

அந்த வகையில் எனது தாயாரும், இயற்கை விவசாயியுமான பா.லட்சுமிதேவியின் வேளாண்மை சார்ந்த காணொளிகளைத் தொடர்ந்து கவனித்துள்ளார். 2025ஆம் ஆண்டு தொடங்கியதுமே மகள் யக்ஷ்வினி, "கோடை விடுமுறைக்கு பாட்டியின் வயலுக்குச் சென்று நாற்று நட வேண்டும்' என்று சொல்லிவிட்டார்.

Story image

ஜூலை 5ஆம் தேதி ஊருக்கு வந்தோம். அடுத்த நாளே மகள் அப்பணியைத் தொடங்கினாள்.

இதனை எதிர்பாராவிதமாக, என் அம்மா கைப்பேசியில் காணொளியாக எடுத்து அதனை முகநூலில் மட்டுமே பதிவு செய்தார். கல்வி வளர்ச்சி நாளான ஜூலை 15ஆம் தேதி வரையும் கிட்டத்தட்ட 1.91லட்சம் பார்வையாளர்கள் அதனைப் பார்த்துள்ளனர். இதில் 9,600 பேர் லைக் (விருப்பம்) போட்டுள்ளனர், 638 பேர் மறுபகிர்வு செய்துள்ளனர்.

402 நபர்கள் வியக்கத்தக்க வகையில் பல நல்ல கருத்துகளைப் பதிந்துள்ளனர்'' என்கிறார் கார்த்திக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.