ராமனின் பஞ்சவடி
பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தம் தொடர்பாக சண்டை நடந்தபோது அதன் 4 துளிகள் அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜயினி மற்றும் நாசிக்கில் விழுந்தது.


பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தம் தொடர்பாக சண்டை நடந்தபோது அதன் 4 துளிகள் அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜயினி மற்றும் நாசிக்கில் விழுந்தது. இந்த நான்கு இடத்திலும் வருடா வருடம் மாசி மகத்தின்போது மேளா நடக்கிறது. 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா
நடக்கிறது. நாசிக்தான் முந்தைய பஞ்சவடி! அகத்தியர், ""5 ஆலமரங்களுடன் அருமையான பூஞ்சோலையாக உள்ளது. அங்கு போய் அகம் கட்டி வாழ்'' என ராமருக்கு அறிவுரை வழங்கினார். காட்டில் ராமனும் சீதையும் சந்தோஷமாக வாழ்ந்தது பஞ்சவடியில்தான்.
நாசிக்கின் வடக்குப் பகுதியில் பஞ்சவடி உள்ளது. கோதாவரியின் ஒருபக்கம் நாசிக்கும் மறுபக்கம் பஞ்சவடியும் உள்ளது. வனவாசத்தில் லட்சுமணனால், சூர்ப்பனகை மூக்கு அறுபட்டு, அது கீழே விழுந்த இடம் நாசிக். சமஸ்கிருதத்தில் "நாசிகா' என்றால் "மூக்கு' என்று பொருள். நாசிக்கில் அருணா, வருணா, கோதாவரி என்ற மூன்று நதிகள் சங்கமிக்கின்றன. இதில் வருணா, அருணா பூமிக்கடியில் இருந்து வருவதாக ஐதீகம்!
12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவின் போது மட்டுமே, இதன் கரையில் உள்ள கர்ப்பூரேஸ்வரர் கோயில் திறந்து பூஜைகள் செய்யப்படும். கோதாவரிக்கும் கோயில் உண்டு. இதனை கோதாவரி கோயில் என அழைப்பர். இது வருடா வருடம் மாசி மகத்தன்று மட்டும் திறக்கப்படும்.
கோதாவரியில் தசரதனின் அஸ்தியை ராமர் கரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்றும் மராட்டிய இந்துக்களில் பெரும்பாலோர், இறந்த உறவினர்களின் அஸ்தியை இங்கே கொண்டுவந்து கரைக்கிறார்கள்.
பஞ்சவடியில் வெள்ளை ராமர் கோயில், கறுப்பு ராமர் (காலாராம்) கோயில் என இரண்டு உள்ளது. வெள்ளை ராமர் சலவைக்கல்லால் ஆனவர். இதில் கறுப்பு ராமர் கோயில் மிகவும் பிரபலம். இந்த கோயில் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ராமர், சீதை, லட்சுமணனை கறுப்புக் கல்லில் அழகு பொங்க அமைத்துள்ளனர். இங்கு ராமர் பொன்வண்ண மீசையுடன் காட்சி தருவது கொள்ளை அழகு. மஞ்சள், குங்குமம், எள், சர்க்கரை ஆகியவை ராமருக்குப் படைக்கப்படுகின்றன. ஸ்ரீராம நவமி உற்சவம் இங்கு மிகவும் பிரபலம். அச்சமயத்தில் 11-ஆம் நாள் தேர்த்திருவிழா உண்டு. கோயிலின் உள்ளே நாசிக் சார்ந்த ராமாயணக் காட்சிகளை அழகிய ஓவியங்களாகக் காணலாம். ராமரின் வனவாசத்தை ஞாபகப்படுத்தும் வகையில் 14 படிகள்.
நாசிக்கில் ராம்குந்த் அருகில் பழைய கபாலீஸ்வரர் கோயிலைக் காணலாம். வழக்கமாக சிவன் கோயில்களில் சிவனுக்கு எதிரில் காட்சிதரும் நந்தியை இங்கு காண இயலாது.
ஒருசமயம் சிவனுக்கும் பிரம்மாவுக்கும் சண்டை வந்தபோது பிரம்மனின் 5-ஆவது தலையை வெட்டி வீழ்த்திவிட்டார் சிவன். இந்த பாவத்திலிருந்து மீள்வதற்கு, பல இடங்களுக்கு வலம் வந்தார். அப்போது நந்தி தேவர், கோதாவரியில் சென்று ஸ்நானம் செய்தால் உன் பாவம் நீங்கும் எனக்கூறி ஆலோசனை வழங்கி சிவனுக்கு குருவாகியதால், இங்கு நந்தி கிடையாதாம். கோதாவரியில் ஸ்நானம் செய்த சிவனும் அதன் இயற்கை அழகில் மயங்கி நிரந்தரமாய் அங்கேயே தங்கிவிட்டார்.
நாசிக்கிலிருந்து 25-ஆவது கி.மீட்டரில் திரியகம்பேஸ்வரர் ஜோதிர்லிங்க கோயில் உள்ளது. இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூன்று லிங்கங்களில் தரிசிக்கலாம். இதுதவிர படி இறங்கி திரியகம்பேஸ்வரரையும் தரிசிக்கலாம்.
இந்த சிவன் கோயில் அருகில் உள்ள பிரம்மகிரியில்தான் கோதாவரி உற்பத்தியாகின்றது. திரியகம்பகத்தில் கார்த்திகை பெüர்ணமியும் மாசிமகமும் விசேஷம். மகாராஷ்டிரத்தின் புண்ணிய úக்ஷத்திரங்களில் முதலிடம் நாசிக் என்கிற பஞ்சவடிக்குத்தான்!
- ராஜிராதா, பெங்களூரு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...