தமிழ் எழுத்தாளர்கள் வட்டாரத்தில் ஜே.எம். சாலி என்ற பெயரை அறியாதவர்கள் அனேகமாக இருக்கமாட்டார்கள். தமிழ் நாட்டிலிருந்தபோது "கண்ணன்' மற்றும் "ஆனந்தவிகடன்' இதழ்களில் சிறுகதைகளும், முத்திரைக் கதைகளும், தொடர்கதைகளும், அவற்றுக்குப் பரிசுகளும் பெற்றவர். கும்பகோணம் அரசினர் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வியை முடித்துவிட்டு, அக்கௌன்டென்ட் ஜெனரல் அலுவலகத்தில் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார் சாலி. 1964இல், நாகப்பட்டினத்தில் கப்பலேறி, சிங்கப்பூர் சென்று, அன்றைக்கு அங்கே இருந்த ஒரே தமிழ் நாளேடான "தமிழ் முரசி'ல் துணை ஆசிரியராகச் சேர்ந்தது எல்லாம் சுருக்கமான முன்கதை.