சினி மினி
காவிரி நீர் பகிர்ந்தளிப்பு தொடர்பான பிரச்னையில் கன்னட சினிமாவுலகினர் ஒன்று கூடி தமிழகத்துக்கு எதிராக தீவிரமாகப் போராடி வருகிறார்கள். இதையடுத்து காவிரிப் பிரச்னைக்காக


* காவிரி நீர் பகிர்ந்தளிப்பு தொடர்பான பிரச்னையில் கன்னட சினிமாவுலகினர் ஒன்று கூடி தமிழகத்துக்கு எதிராக தீவிரமாகப் போராடி வருகிறார்கள். இதையடுத்து காவிரிப் பிரச்னைக்காக நடிகர்களைத் திரட்டி போராடுவோம் என்றார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். ஆனால் மேலிடத்திலிருந்து "இந்தப் பிரச்னையை நீதிமன்றம் மூலமாக அரசே எதிர்கொள்ளும்; போராட்டம் எதுவும் வேண்டாம்' என அழுத்தமாகக் கூற, போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
* பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூர் சுத்த சைவம். சினிமாவில் அசைவம் சாப்பிடுவது போல் காட்சிகள் வந்தாலும் அதில் நடிக்க மறுத்துவிடுவார். இதைக் கேள்விப்பட்ட பிராணிகள் நல அமைப்பான பீட்டா, அண்மையில் திருமணமான கரீனா கபூர்-சையஃப் தம்பதிக்கு சாக்லெட் கிரீமால் செய்யப்பட்ட இரண்டு பிரம்மாண்ட கேக்குகளைப் பரிசளித்துள்ளது.
* "இம்சை அரசன் 23-ம் புலிகேசி'யின் இரண்டாம் பாகம் தொடங்கப்படவுள்ளது. ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்க முதல் பாகத்தில் அசாத்தியமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய வடிவேலு கதாநாயகனாக நடிக்கிறார். சுமார் ரூ.20 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் கொண்ட இந்தப் படத்தின் தயாரிப்பு, ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் என்றாலும் பணத்தை வாரி வழங்கப்போவது என்னமோ வைகைப் புயல்தான் என்கிறது சினிமா வட்டாரம்.
* மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள மோகன்லாலுக்கு ராணுவத்தின் லெப்டினென்ட் கர்னல் அந்தஸ்து கொண்ட கெüரவ பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் கொரிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தாய்கோண்டா அமைப்பின் தலைமை நிலையமான குக்கிஓண் சார்பில் இந்த ஆண்டுக்கான கெüரவ பிளாக் பெல்ட் விருது வழங்கப்படுகிறது. 1977-78-ம் ஆண்டுகளில் கேரளத்தில் மாநில குத்துச்சண்டை சாம்பியனாக இருந்தவர் மோகன்லால்.
* "கலகலப்பு' படத்துக்குப் பிறகு அஞ்சலிக்கு தமிழிலும் தெலுங்கிலும் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. "பெரிய ஹீரோக்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தால் போதும்' என்ற அஞ்சலியின் கொள்கைதான் வாய்ப்புகளுக்குக் காரணம் என்கிறது சினிமா வட்டாரம். அந்த வகையில் தற்போது தெலுங்கிலும் தமிழிலும் ஆறு படங் களைக் கைவசம் வைத்துள்ளார் அஞ்சலி.
* தமிழில் "பிரியம்' படத்தில் அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்தவர் மந்த்ரா. சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய அவர் பெங்களூரில் வசித்து வந்தார். தற்போது பி.டி.செல்வகுமார் இயக்கி வரும் "ஒன்பதுல குரு' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். "படையப்பா' நீலாம்பரி போன்ற வில்லத்தனம் நிறைந்த வித்தியாசமான வேடம் என்பதால் இந்தப் படத்தில் நடிக்கிறேன்' என்கிறார் மந்த்ரா.
* பெரிய திரையில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் சின்னத்திரைக்கு வருகிறார் மீரா ஜாஸ்மின். முன்னணி சேனல் ஒன்றில் வெளியாகவுள்ள தொடரில் நடிப்பதற்காக தயாரிப்பு நிறுவனத்திடம் ஓ.கே. சொல்லியிருக்கிறார். சம்பளம்... ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் மட்டுமே.
* ஓவியாவுக்கு இரண்டு ஹீரோயின் சப்ஜக்டாக அமைகிறதாம். "எப்பொழுதாவது ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராக நடிக்கலாம். ஆனால் எல்லாப் படங்களிலும் அப்படியே நடித்தால் எப்படி? அதனால் தனி கதாநாயகி வாய்ப்பு கொடுங்கள்' என இயக்குநர்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறார். மேலும் தனது எழிலைப் பொலிவூட்ட தனது தலைமுடியை வித்தியாசமான வண்ணத்தில் கலரிங் ப்ளஸ் கர்லிங் செய்துள்ளார். இதற்கு மட்டும் பியூட்டி பார்லருக்கு இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார்.
* ஒய்.ஜி.மகேந்திரன் விசில் ஒலி மூலம் நன்கு பாடும் ஆற்றல் கொண்டவர். இவருடைய திறமையை அறிந்த அவருடைய சகலை ரஜினிகாந்த் "உங்கள் விசில் திறமையை ஒரு சி.டி.யாக வெளியிடலாமே' என ஆலோசனை கூறியுள்ளார். இதையடுத்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளியான "சாந்தி', "கணவன்', "வாழ்க்கைப் படகு', "போலீஸ்காரன் மகள்' (இரண்டு பாடல்கள்), "காதலிக்க நேரமில்லை', "பெரிய இடத்து பெண்', "படகோட்டி', "பாசம்', "நீதி' ஆகிய ஒன்பது படங்களிலிருந்து பத்து சூப்பர் ஹிட் பாடல்களை விசில் ஒலியில் பாடி சி.டி.யாக வெளியிட்டுள்ளார். சரிகம இசை நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த சி.டி.க்கு எம்.எஸ்.வி. இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...