நடைவண்டி நாள்கள்-3
இரண்டாவது சுற்றுத் தேடலிலும் சரவணனின் சித்தப்பா செல்வம் சிக்காமல் போனது பெரிய துக்கமாக இருந்தது. அது துக்கமல்ல, அச்சம். அவருடைய ஒரு முகவரியைத் தவிர எங்களிடம் வேறு யாருடைய முகவரியும் இல்லாதது அச்சத்தை


இரண்டாவது சுற்றுத் தேடலிலும் சரவணனின் சித்தப்பா செல்வம் சிக்காமல் போனது பெரிய துக்கமாக இருந்தது. அது துக்கமல்ல, அச்சம். அவருடைய ஒரு முகவரியைத் தவிர எங்களிடம் வேறு யாருடைய முகவரியும் இல்லாதது அச்சத்தை அதிகப்படுத்தியது. பெரிய பெரிய கட்டடங்கள், நீண்ட அகன்ற சாலைகள், நெரிசல் பிதுங்கும் கடைத்தெருக்கள். பார்த்த, பழகிய முகங்கள் அற்றுப்போன கான்கிரீட் வனாந்திரத்தில் தோள்பைகள் சுமந்த இரண்டு நாட்டுப்புறத்து இளைஞர்களை ஏறிட்டு விசாரிக்க எவருமே இல்லை.
சீனிவாசனைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு "செல்வம் வேறு எங்கேயாவது கிடைப்பாரா?' என்று வினவினோம். "தெரியாது' என்றும், "தெரிந்த யாரிடமாவது விசாரிக்கிறேன்' என்றும் அன்பு பொழிந்தார். ஆனாலும், அகப்பட்ட ஒருவரை மேலும்மேலும் தொந்தரவுக்கு ஆளாக்குவதுபோல உணர்ந்தோம். கையறு நிலை. பயணக் களைப்பும், நடந்த சோர்வும் சேர்ந்து கொள்ள, எழும்பூர் ரயில்வே குடியிருப்பு வளாகத்தில் உள்ள தூங்குமூஞ்சி மர நிழலில் உட்கார்ந்து கொண்டோம்.
சரவணனுக்கு வயிற்றைப் பசி கிள்ளுவதாகச் சொன்னபோது மணி பன்னிரெண்டு இருக்கலாம். உச்சி சூரியன் எங்கள் அறியாமையைக் குதறுவது மாதிரி அடித்துக் கொண்டிருந்தது. "அவசரப்பட்டுவிட்டோமோ...? சிக்காத சித்தப்பா செல்வம் மாதிரி மேலும் சிலரது அறிமுகங்கள் கிடைக்காமல் ஒரே ஒரு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு கிளம்பியது எத்தனை புத்தியற்ற செயல்' எனப்பட்டது. வாழ்க்கை எளிதுதான். ஆனால், அதை நம்முடைய அறியாமைதான் மாபெரும் சிக்கலாக்கி சிதைத்துவிடுகிறது. கதை, கவிதை, கட்டுரை - எதில் சிறந்து விளங்கினாலும் யதார்த்தத்தைப் படிக்க அல்லது பழகிக்கொள்ள தவறுவோமேயானால் அதோகதிதான்.
நடப்பவற்றைப் பாடமாக எடுத்துக்கொள்வதா? இல்லை பகிரங்கமாக முட்டிக்கொள்வதா? எனப் புரியவில்லை. காலை உணவை தெருவோரத்தில் இருந்த கையேந்தி பவனில் முடித்துக் கொண்டோம். இருக்கும் சொற்பத் தொகையை எண்ணி எண்ணி செலவழித்தாலன்றி, வேலை கிடைக்கும்வரை நாட்களை ஓட்ட முடியாது. ஆயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்து ரயில் கட்டணம் போக மீதமிருப்பவற்றை டிக்கெட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தியிருந்தேன். ரூபாயின் அருமையை சில்லறைக் காசுகளிலிருந்து முதன்முதலாக உணரத் தொடங்கினேன். சரவணன் கொண்டு வந்த ரூபாயும் அவ்விதமே பாதுகாக்கப்
பட்டது.
ஹாரிங்டன் சாலையின் நடைபாதையோர குடிசைகளைப் பராக்குப் பார்த்துக் கொண்டே இரண்டு பேரும் நடந்தோம். வீதிகள் பிடித்ததுபோலவும், பிடிக்காதது போலவும் மாறி மாறித் தோன்றின. யாரோ ஒருவருடைய வீட்டின் காம்பவுண்ட் நிழலில் கொஞ்ச நேரம் நின்றால் தேவலாம் போலிருந்தது.
நின்றதும், சரவணனுக்குத் தீப்பெட்டி தேவைப்பட, அருகே நின்றிருந்த ஆட்டோக்காரரிடம் வாங்கித் தந்தேன். ஆட்டோவின் முகப்பில் "தமிழரசி' என்று விளம்பரக் காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. "தமிழரசி' - "புதியபார்வை' பதிப்பகத்திலிருந்து வெளிவரத் தொடங்கியிருந்த வார இதழ். எனக்கும் சரவணனுக்கும் "தமிழரசி'யில் சில கவிதைகள் பிரசுரமாகியிருந்தன. சரவணனுக்கு ஏற்கெனவே அறிமுகமாயிருந்த சுந்தரபுத்தன் அங்குதான் பணியாற்றிக் கொண்டிருந்தார். உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடைபெறும்போது, தஞ்சை மணி என்ற பெயரில் இரா. செழியன் நடத்திய இதழில் பணிபுரிந்தவர். காவ்யா எனும் பெயரில் கையெழுத்துப் பத்திரிகை மூலம் எங்கள் பகுதியில் பிரசித்தி பெற்றிருந்தவர். ஆட்டோக்காரரிடம் தீப்பெட்டியைக் கொடுத்துவிட்டு, "தமிழரசி' அலுவலகம் எங்கிருக்கிறது என்று கேட்க, ஒட்டப்பட்டிருந்த பிட் நோட்டீûஸப் பார்த்து டி.டி.கே. சாலை என்றார். அது ஆழ்வார்பேட்டை பகுதியில் இருக்கிறது என்றவர், "வேண்டுமானால் வாருங்கள். இறக்கிவிட்டுப் போகிறேனே' என்றார். சரவணனுக்கு ஆட்டோவுக்குச் செலவழிக்க விருப்பமில்லை. "நடந்தே போகலாம்' என்றான். "ரொம்ப தொலைவு' என்ற ஆட்டோக்காரர் கண்கள் சுளித்து, மிதமாக முறைத்தது "ஐயேய்' என அருவெறுப்பாக இருந்தது. தீப்பெட்டி இலவசமாகக் கொடுத்ததே தவறுபோல பார்த்து, விருட்டென்று கிளம்பிவிட்டார். நடக்கத் தொடங்கினோம். செல்வத்தை மறந்தேவிட்டோம். நடக்கப் பிடித்தது.
கூடுதல் உற்சாகமும் புதிய நபரைச் சந்திக்கப் போகும் துறுதுறுப்பும் எங்கள் கால்களைக் கவ்விக் கொண்டன. பத்திரிகை அலுவலகம் எப்படி இருக்கும் என்று எனக்குள் இருந்த கற்பனைக்குப் பொருத்தமாக "தமிழரசி' அலுவலகம் அமைந்திருந்தது. இரண்டாவது தளத்தில் உள்ள வரவேற்பு வளாகத்தில் அமரும் வரை என் கண்கள் வியப்பில் இருந்து மீளவே இல்லை. சுந்தரபுத்தன் அச்சுப்பிரிவில் இருப்பதாகவும், வரும்வரை காத்திருக்கும்படியும் சொன்னார்கள். சஸ்பென்ஸ் அலுவலகத்தை விடவும், "தமிழரசி' அலுவலகம் வரவேற்பு நல்கிய விதம் எங்களுக்குப் பிடித்துப் போனது. இரண்டு பேருக்கும் முகத்தில் சிரிப்பு தவழ்ந்தது. காத்திருக்கத் தகுந்த இடமாகப் பட்டது. காலையிலிருந்து நடந்த நடைக்கு ஓய்வுகொள்ள அந்தக் காத்திருப்பை முழுதாக அனுபவிக்கக் கண்கள் தூக்கத்தைத் துழாவின. மெய்மறந்து இங்கேயே தூங்கிவிட்டால் கூட பரவாயில்லை போலிருந்தது. சோபாவில் சரிந்து கொண்டோம்.
"வாங்க' என்ற குரல் கேட்டு இமை பிரிக்கையில் சுந்தரபுத்தன் எதிரே நின்றிருந்தார். "நலமா?' என்று ஆரம்பித்து, வந்த விவரம், செய்ய வேண்டிய உதவி குறித்து எல்லாம் கேட்டுக் கொண்டார். செல்வத்தைத் தேடிய கதையைக் கேட்டதும், "நல்லது செல்வத்தைத் தேடித்தான் நானும் சென்னைக்கு வந்தேன்' என்றார். "எதைத் தேடுகிறோமோ, அது கிடைக்கக் காத்திருக்க வேண்டும். நான் தேடிய செல்வம் மாதச் சம்பளமாகக் கிடைக்கிறது. நீங்கள் தேடும் செல்வம் சீக்கிரம் கிடைத்துவிடுவார்' என்றார். தேநீர் வரவழைத்துக் கொடுத்தார். உபசரிக்கக் கொடுத்த தேநீர், விலைகொடுத்து நாங்கள் குடித்த தேநீரைப்போல மோசமாக இல்லை. இனாமாக எது கிடைத்தாலும், அது அன்றைக்கு இருந்த நிலைக்குப் பிடித்தே போயிருக்கும்.
தங்குவதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா? என்ற கேள்வியைச் சுந்தரபுத்தன் எதிர்பார்த்திருக்க மாட்டார். வேறு வழியில்லை என்றோம். சுந்தரபுத்தன் முகத்தில் மாற்றம் தென்படவில்லை. "நான் எழும்பூரில் தங்கியிருக்கிறேன். அது ஆய்வு மாணவர்கள் தங்கும் விடுதி. இன்னொருவர் தயவில்தான் நானே தங்கியிருக்கிறேன்' என்ற பிறகுதான் கேள்வியைத் தவிர்த்திருக்கலாமோ என எண்ணினோம்.
"அலுவலகம் முடிய மாலை ஆறு மணியாவது ஆகிவிடும். அதுவரை விடுதி வாசலில் காத்திருங்கள். வந்த பிறகு வேறு யாருடைய அறையிலாவது தங்க முடியுமா? எனக் கேட்போம்' என்றார். ஆறுதலாய் இருந்தது. உதவிகூட வேண்டியதில்லை. உதவி செய்வதாகச் சொல்லிய அவரது மனோபாவத்தை அலுவலகத்தின் வெளியே வந்தது முதல்
புகழத் தொடங்கினோம்.
"இனி நடக்க இயலாது. பேருந்தில்போய் விடுதி வாசலில் காத்திருப்போம்' என்றேன். "அவர் வரும்வரை ஒரே இடத்தில் காத்திருக்க முடியாதே. ஒன்று செய்யலாம், மெரீனாவுக்குப் போய் கடலை தரிசித்துவிட்டுப் பிறகு விடுதிக்குப் போகலாம்' என்றான் சரவணன். பேரூந்தில் கூட்டமில்லை. படிக்கட்டுப் பக்கவாட்டில் அமர்ந்திருந்த நடத்துநரிடம் "மெரீனாவுக்கு இரண்டு டிக்கெட்' என்றேன். "மெரீனாவில் எங்கே?' என்றார். மெரீனா சாலையில் மூன்று நிறுத்தம் உள்ளது. புரியாமல், மீண்டும் "மெரீனாவுக்கு' என்றேன். ஆட்டோக்காரரின் தம்பிபோல, நடத்துநரும் அதேமாதிரி முறைத்தார். அவர்கள் முறைத்தது சென்னை எங்களைப் பார்த்து முறைப்பதுபோலவே இருந்தது. "கண்ணகி சிலை' என்றேன். இருவருக்கும் மெரீனாவில் தெரிந்த ஒரே இடம், கடலுக்கு அப்புறம் கண்ணகி சிலைதான். "ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொள்' என்று சரவணன் ஒதுங்கினான்.
நடத்துநரின் இருக்கைக்கு முன்பு ஒரு கல்லூரி மாணவி அமர்ந்திருந்தாள். நடத்துநரும் மாணவியும் பேசிக்கொண்டே வந்தார்கள். அந்தப் பெண் அழகாய் இருந்தாள். அழகாய் இருப்பது பெண்களுக்கு வாய்த்திருக்கும் இயல்புகளில் ஒன்று. நடத்துநரோடு பேசும்போது மிக அழகாய் இருந்தாள். மஞ்சள் நிற சுடிதாருக்கு ஏற்ப, மஞ்சள் கம்மல், மஞ்சள் வளையல், மஞ்சள் கைக்குட்டை எனச் சகலமும் மஞ்சளாய் அப்பெண் தோற்றமளித்தாள். மஞ்சளின் மகிமையை எங்களைவிட நடத்துநர் நன்கு அறிந்தவராய் இருந்தார். மஞ்சள் வெயில் குளிரத் தொடங்கியது.
- பயணம் தொடரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...