நான் மூன்றாவது படிக்கும் போது சைக்கிள் விடக் கற்றுக் கொண்டேன். எனக்கு சைக்கிள் விடக் கற்றுக் கொடுத்தவன் ஐந்தாவது படிக்கும் எங்கள் தெருப் பையன். எங்கள் கிராமத்தில் ஒரே ஒரு வாடகை சைக்கிள் கடைதான் இருந்தது. "பெரியார் சைக்கிள் கடை'. ஏழெட்டு பெரிய சைக்கிள், ஒன்றிரண்டு சிறிய சைக்கிள், ஏகப்பட்ட சைக்கிள் பாகங்கள், பஞ்சர் ஒட்ட ஒரு தண்ணீர் தொட்டி. இவையெல்லாம் சேர்ந்த ஒரு சைக்கிள் கடை. எந்த சைக்கிளுக்கும் கேரியர் கிடையாது. ஒவ்வொரு சைக்கிளுக்குப் பின்னாலும் பெரியார் என்று எழுதி ஒன்று, இரண்டு என்று நம்பர் போட்டிருக்கும்.