டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொடுதலைக் கீரை

பொடுதலைக் கீரை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலைகள் பற்கள் போன்ற அமைப்போடு இருக்கும்.

News image
பொடுதலைக் கீரை
Updated On :18 அக்டோபர் 2025, 10:30 am

சா. அனந்தகுமார்

பொடுதலைக் கீரை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலைகள் பற்கள் போன்ற அமைப்போடு இருக்கும். தரையோடு ஒட்டி வளரும்.

பூக்கள் சிறியதாக ஐந்து இதழ்களைக் கொண்டிருக்கும். நீர்நிலைகளின் கரைகளில், ஈரமுள்ள இடங்களில் தானாகவே இவை வளரும். இதன் தாவரவியல் பெயர்- லிபியா நோடிபுளோரா. இது 'வெர்பனேசியே' என்ற தாவரக் குடும்பத்தின் கீழ்வருகிறது.

இளம் இலைகளை நறுக்கி, பருப்புடன் சேர்த்துச் சமைத்து கடைந்து உண்ணலாம். இலைகளை நெய்யில் வதக்கி, உணவோடு சேர்த்தும் பயன்படுத்தலாம். செடியை அரைத்தும், இலைக் கசாயமாகவும், பொடியாகவும் பயன்படுத்தலாம்.

சளிநீக்கி, வயிற்று பிணிநீக்கி, மூலமகற்றி, வலிபோக்கி, புண்ணாற்றி, குளிர்ச்சியூட்டி, வீக்கமகற்றி, உரமூட்டி, துவர்ப்பி போன்ற குணங்களைக் கொண்டவை.

மருத்துவப் பயன்கள்: இளஇலைகளைப் பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து உப்பு, மிளகாய், வெங்காயம் சேர்த்து கூட்டாகச் செய்து உண்டால் தீராத இருமல் குணமாகும்.

இலைகளை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வர அஜீரணம், வலி, வயிற்றுப் போக்கு போன்ற வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.

இலைகளோடு புளி, உப்பு, பருப்பு சேர்த்து துவையலாக அரைத்து உணவோடு சேர்த்து உண்ண மூலநோய் குணமாகும்.

கைப்பிடி இலைகளை எடுத்து, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து அரைத்து, ஒரு கிண்ணம் தயிரில் கலந்து அருந்த உடல்சூடு தணியும்.

பத்து இலைகளோடு இரு சிட்டிகை ஓமம் சேர்த்து அரைத்து, ஒரு அவுன்ஸ் நீரில் இட்டு காய்த்து வடிகட்டி, சிறார்களுக்கு அளித்திட வயிற்றுக்கழிச்சல் தீரும்.

இலைச்சாறு ஒரு கரண்டியோடு ஒரு கரண்டி நல்லெண்ணெய் கலந்து, தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறியவுடன் குளித்துவர பொடுகு மாறும்.

இலைகளை உலரவைத்து, பொடியாக்கி இரு சிட்டிகைப் பொடியுடன் சம அளவு கற்கண்டு பொடி கலந்து, வெண்ணெய் குழைத்து உண்ண மூலம் குணமாகும்.

செடியை வேருடன் பிடுங்கி இடித்துச் சாறு எடுத்து சம அளவு சாறை சம அளவு நல்லெண்ணெயில் கலந்து சூடு செய்து, தலையில் தேய்த்து குளித்து வர தலைவலி, ஒற்றைத் தலைவலி மாறும்.

இலைகளை அரைத்து உடலில் தேய்த்து வர அரிப்பு, தேமல் போன்றவை மாறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.