/

எங்களாலும் சாதிக்க முடியும்!

நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் திருநங்கைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், திருநங்கைகளின் நலவாழ்வு குறித்த சிந்தனைகளும், செயல்பாடுகளும் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:22 pm

க. தங்கராஜா

நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் திருநங்கைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், திருநங்கைகளின் நலவாழ்வு குறித்த சிந்தனைகளும், செயல்பாடுகளும் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன.

திருநங்கைகள் திருமணம் செய்து கொள்ளவும், சொத்துரிமையைப் பெறவும், கல்வி, வேலைவாய்ப்புகளில் சிறப்பு இட ஒதுக்கீடுகளைப் பெறவும் உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது.

தமிழகம் இதிலும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. இங்கு திருநங்கைகள் காவல் துறை, மருத்துவத் துறை, எழுத்துத் துறை, தொலைக்காட்சித் தொகுப்பு, கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அண்மைக் காலங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு நலவாரியம், சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்துவது, வேலைவாய்ப்புகள், கடன் உதவி வழங்குவது, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது என தமிழகத்தில் திருநங்கைகளுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

காலமாற்றமும், மனமாற்றமும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் தங்களைத் திருநங்கையாக உணருபவர்கள், அதற்கேற்ப செயல்படுபவர்கள் குடும்பத்தை விட்டு வெளியேற்றப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கப்படுவதும் தொடர்ந்துதான் வருகிறது.

சமுதாயத்தில் மற்றவர்களைப் போலவே தாங்களும் மதிக்கப்பட வேண்டும் என்ற ஏக்கம் நிறைந்திருக்கும் திருநங்கைகள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அதுபோன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபடும் சங்கமாக கோவை மாவட்டத் திருநங்கைகள் நலச் சங்கம் உள்ளது. கோவை மாவட்டத்தில் சுமார் 600 திருநங்கைகள் உள்ள நிலையில், இவர்களின் நலன் காக்கும்விதமாக கடந்த 2010 முதல் செயல்பட்டு வருகிறது இந்த சங்கம். 

இது குறித்து இச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சங்கீதா கூறியதாவது: 

""சங்கத்தின் மூலம் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள், ஓய்வூதியம், அரசு வீட்டு மனை, வீடு போன்றவை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 14 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சின்னவேடம்பட்டி, பாப்பம்பட்டி உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் 8 திருநங்கைகளுக்கு தள்ளுவண்டி உணவகம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கி வரும் கரோனா, திருநங்கைகளான எங்களின் வாழ்வையும் விட்டு வைக்கவில்லை. திருமண மண்டபங்களில் சமையல் வேலைகளுக்குச் சென்று வந்த எங்களது அமைப்பைச் சேர்ந்த பல திருநங்கைகளுக்கு கடந்த 6 மாதங்களாக எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களுக்காக திட்டமிடப்பட்டதுதான் "கோவை டிரான்ஸ் கிச்சன்'.

தமிழகத்திலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க திருநங்கைகளால் நடத்தப்படும் உணவகம் என்ற பெயரைப் பெற்றுள்ள எங்களின் கோவை டிரான்ஸ் கிச்சன், கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி சாலையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சமையல், பரிமாறுவது, நிர்வாகம் உள்ளிட்ட பணிகளில் மொத்தம் 10 திருநங்கைகள் ஈடுபட்டுள்ளனர்.

தொடங்கிய ஒரு வாரத்திலேயே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த உணவகத்துக்கு யுனைடட் வே சென்னை, ஸ்வஸ்தி போன்ற நல்ல உள்ளங்கள் உதவியுள்ளன. கோவை பிஷப் அப்பாசாமி கல்லூரி சார்பில் எங்களுக்கு இலவசமாக உணவு தயாரிப்பு, நிர்வாகம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த உணவகத்தினால் 10 திருநங்கைகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதுடன் எங்களைப் போன்ற மற்ற திருநங்கைகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்கும். 

சமூகத்தின் பார்வையில் எங்களைப் பற்றிய மாற்றம் காண  உதவும்  சரியான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் திருநங்கைகளாலும் சாதிக்க முடியும் என்பதற்கு நல்லதொரு உதாரணமாகியிருக்கும் இந்த திருநங்கைகள், விரைவில் தங்களின் இரண்டாவது உணவகத்தையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். அதற்காக பாத்திரங்கள், சமையலறை உபகரணங்கள் போன்ற உதவிகளையும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்'' என்றார்.

படங்கள்: வீ.பேச்சிக்குமார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.