விண்வெளி ஆய்வுக்குச் செல்லும் முதல் கருப்பின பெண்!
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்குச் செல்லும் முதல் கருப்பின பெண் என்கிற சாதனையைப் படைக்க இருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஜினெட் எப்ஸ்.


சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்குச் செல்லும் முதல் கருப்பின பெண் என்கிற சாதனையைப் படைக்க இருக்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஜினெட் எப்ஸ். போயிங் என்ற தனியார் நிறுவனம் தயாரிக்கும் ஸ்டார்லைனர்-1 என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) 2021-ஆம் ஆண்டு ஜினெட் செல்வார் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
இப்பயணத்தில் சக விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், ஜோஷ் கசாடா ஆகியோருடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சிப் பணிகளை ஜினெட் மேற்கொள்வார்.
அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பினத்தவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இதுவரை விண்வெளிக்குச் சென்றுள்ளனர். அவர்களில் குயன் ஃப்ளூபோர்டு என்பவர்தான் விண்வெளிக்கு (1983) சென்ற முதல் கருப்பினத்தவர். 2000-இல் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்ட பிறகு இதுவரை 200-க்கு மேற்பட்டோர் அங்கு சென்று தங்கிப் பணியாற்றியுள்ளனர். விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணிகளில்கூட கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அங்கு தங்கியிருந்து பணியாற்றும் வாய்ப்பை கருப்பினத்தைச் சேர்ந்தவர்களில் யாருக்கும் கிடைக்காத நிலையில், முதல் வாய்ப்பு ஜினெட் எப்ஸூக்கு கிடைத்திருக்கிறது.
இயற்பியலில் இளநிலை பட்டமும், அறிவியலில் முதுநிலை பட்டமும், விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டமும் முடித்துள்ளார் ஜினெட். தனது முனைவர் பட்ட பயிற்சியின்போது நாசாவின் மாணவ ஆராய்ச்சியாளர் திட்டத்தில் பணியாற்றி பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். பின்னர், ரிசர்ச் லேபரட்டரீஸ் என்ற நிறுவனத்தில் இரு ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பிறகு சிஐஏவில் இணைந்து 7 ஆண்டுகள் டெக்னிக்கல் இன்டெலிஜென்ஸ் அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
அதன்பிறகு 2009-இல் விண்வெளி வீரர்கள் குழுவில் தேர்வு பெற்றார். ஜினெட்டுக்கு இப்போது கிடைத்துள்ளது முதல் வாய்ப்பு என்றுகூட சொல்ல முடியாது. ஏனென்றால் 2018-ஆம் ஆண்டே ஜினெட்டுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தும் கைகூடாமல்போனது. அப்போது ரஷியாவின் சோயுஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மூவரில் ஒருவர்க ஜினெட். ஆனால், கடைசி நேரத்தில் ஜினெட் மாற்றப்பட்டு செரீனா அனான் சான்ஸ்லர் என்பவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. பொதுவாக, மருத்துவப் பிரச்னை அல்லது குடும்பரீதியான காரணங்களுக்காகத்தான் விண்வெளி வீரர்கள் மாற்றப்படுவார்கள்.
ஆனால், இந்த இரண்டு காரணங்களும் இல்லாத நிலையில் கடைசி நேரத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றமடைந்த ஜினெட்டுக்கு இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் இன்னும் இரு முக்கியமான சோதனைகளைக் கடக்க வேண்டியுள்ளது. கடந்த டிசம்பரில் ஆளில்லாமல் இந்த விண்கலம் ஏவப்பட்டபோது, சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையவில்லை. ஆனால், பாதுகாப்பாக தரையிறங்கியது. இன்னொரு முறை இந்த சோதனையை ஸ்டார்லைனர் வெற்றிகரமாக நிறைவேற்றிய பின்னரே, ஜினெட் உள்ளிட்ட மூன்று விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்ல முடியும்.
"இது எனது நிர்வாகம் எடுத்த முடிவு. இருந்தாலும் நான் தொடர்ந்து முயற்சிப்பேன்' என நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார் ஜினெட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...