/

சவாலே சமாளி: சைக்கிளில் துவங்கி.. ஏற்றுமதியை நோக்கி...

சைக்கிளில் துவங்கிய சுயதொழில் வாழ்க்கையில் இப்போது பல லட்சம் சொத்து மதிப்புகளுக்கு சொந்தக்காரராகவும், 50-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பளிக்கும்  தொழில்முனைவோராகவும் உருவெடுத்திருக்கிறார் திருப்பூர

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:02 pm

என். தமிழ்ச்செல்வன்

சைக்கிளில் துவங்கிய சுயதொழில் வாழ்க்கையில் இப்போது பல லட்சம் சொத்து மதிப்புகளுக்கு சொந்தக்காரராகவும், 50-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பளிக்கும்  தொழில்முனைவோராகவும் உருவெடுத்திருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த எம். தமிழ்ச்செல்வி.

 ஆண்களின் ஆதிக்கமே நிறைந்துள்ள திருப்பூர் பனியன் தொழில்துறையில் பெண்கள் சாதிப்பது அரிது. ஆனால், அந்த எண்ணங்களை முறியடிக்கும் விதமாக தொழில் பின்னணிகள் எதுவுமின்றி பின்னலாடை உற்பத்தித் தொழிலில் சாதனை படைத்துக் கொண்டுள்ள தமிழ்ச்செல்வி 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

 திருப்பூர் ஜீவா காலனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்-தனலட்சுமிக்கு 3-வது மகளான  

இவர், குடும்ப வறுமையால் அருகிலுள்ள பனியன் நிறுவனத்துக்கு ஓவர் லாக் டெய்லராக வேலைக்குச் சென்றார். அங்கு இவருக்கு தோழியான ராஜாத்தியுடன் சேர்ந்து 1996-ல் ஓலப்பாளையம் பகுதியில் ரூ.12 ஆயிரம் முதலீட்டில் ஓவர் லாக், ஃபேட் லாக் இயந்திரங்களுடன் சுயதொழிலில் ஈடுபடலானார்.

 டூம்லைட் பகுதியில் கிடைக்கும் பனியன் ரோல்களை சைக்கிளில் கட்டி வந்து தாங்களாகவே காலர்சர்ட்கள் போன்றவற்றை தயாரித்து மொத்த வியாபாரிகளிடம் விற்று லாபம் பார்த்தனர். ஆனால், மற்ற நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்றால் கிடைக்கும் சம்பளத் தொகையை மட்டும் அவர்கள் எடுத்துக்கொண்டு லாபத்தை மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்ததால் 4 ஆண்டுகளில் அந் நிறுவனம் 10 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்தது.

 அந்த நேரத்தில் காந்திநகரில் பிரிண்டிங் தொழில் செய்த ஏ.முருகராஜ் என்பவரை கரம் பிடித்த தமிழ்ச்செல்வி, கூட்டுத்தொழிலை பிரித்து காந்திநகரில் தனியாக பனியன் நிறுவனத்தை ஏற்படுத்தினார். பிறகு கணவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டபோது அவருக்கும் தன் நிறுவனத்திலேயே பணியாற்றும் வாய்ப்பளித்துள்ளார்.

 அதன்படி, தமிழ்ச்செல்வியின் நிர்வாகத்திறமை, தொழில் அனுபவம் காரணமாக  தற்போது பல லட்சம் சொத்து மதிப்புடன் கூடிய 2ம் நிலை பின்னலைட உற்பத்தி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருப்பதுடன், நேரடியாக மற்றும் ஜாப்ஒர்க் நிறுவனங்கள் மூலமாக சுமார் 50 பேருக்கு வேலைவாய்ப்பளித்தும் வருகிறார்.

 இச்சாதனை குறித்து தமிழ்ச்செல்வி கூறியது:

 பனியன் தொழிலில் எந்த பின்புலமும் இல்லாமல் பெண்கள் சாதிப்பது கடினம். அந்த வகையிலேயே, எங்களுக்கும் தொழிலில் பலதரப்பட்ட நெருக்கடிகளும், சோதனைகளும் வந்துள்ளன. அவ்வாறான காலகட்டத்தில் "எதைக்கொண்டு வந்தோம் இழப்பதற்கு' என்ற பகவத்கீதை வரிகளை எண்ணிக்கொண்டு எங்கள் பயணத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம். அந்த நம்பிக்கையும், கடின உழைப்புமே இத்தகைய வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது.

 ஆரம்ப காலத்தில் காலர் சர்ட்கள் மட்டுமே தயாரித்து வந்த எங்கள் நிறுவனத்தில் தற்போது பனியன் ஆடைகள் தொடர்பான அனைத்து ரகங்களும் வியாபாரிகள் கேட்கும் தரத்தில் உற்பத்தி செய்து அளிக்கிறோம். விரைவில் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடவும் திட்டம் உள்ளது.

 எந்தத் தொழிலிலும் லாபம், நஷ்டம் என ஏற்றத்தாழ்வுகள் வரும். ஆனால், அந்நேரத்தில்  மனம் தளராமல் நஷ்டத்துக்கான காரணங்களை அறிந்து அதை திருத்திக் கொண்டாலே தொழிலில் மேன்மையடையலாம் என்றார்.

 தற்போது 2 குழந்தைகளுக்கு தாயாகியுள்ள நிலையிலும் தொடர்ந்து பின்னலாடை நிர்வாகத்தில் முழுமூச்சாக ஈடுபட்டுக் கொண்டுள்ள தமிழ்ச்செல்வி, வறுமையில் இருந்த தனது மூத்த சகோதரி மகேஸ்வரிக்கு அதே பகுதியில் சிறிய பனியன் ஜாப்ஒர்க் நிறுவனத்தை ஆரம்பித்து அவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

 ஆரம்ப காலத்தில் உதவிக்கு ஏங்கிய தமிழ்ச்செல்வி தற்போது சிறந்த இல்லத்தரசியாகவும், பலரது குடும்பங்களுக்கு ஒளி கொடுக்கும் தொழில் வல்லுனராகவும் உயர்ந்திருப்பது சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு முன்னுதாரணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.