போராட்டமான வாழ்க்கை...
கிரிக்கெட் பயிற்சியாளர் ராமகாந்த் ஆச்ரேக்கரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் நிலைமையைக் கண்டு, 'எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே' என்று ரசிகர்கள் கலங்கியுள்ளனர்.


மும்பையில் அண்மையில் நடைபெற்ற கிரிக்கெட் பயிற்சியாளர் ராமகாந்த் ஆச்ரேக்கரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் நிலைமையைக் கண்டு, 'எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே' என்று ரசிகர்கள் கலங்கியுள்ளனர்.
மன, உடல் ரீதியான பாதிப்புக்குள்ளாகியுள்ள அவர், தனது இளம்வயது நண்பர் சச்சினின் கையைப் பிடித்தவாறே பேசினார். அவரிடமிருந்து விலகிப் போகுமாறு, சச்சினிடம் ஒருவர் சைகை காண்பிக்க வேண்டிவந்தது.
மதுப் பழக்கம், வருமானப் பற்றாக்குறையால், காம்ப்ளி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார். இதையறிந்த 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர், 'மறுவாழ்வு மையத்துக்கு காம்ப்ளி செல்லவிருந்தால் உதவத் தயாராக உள்ளோம்' என்று தெரிவித்துள்ளனர்.
வினோத் காம்ப்ளியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் நடுவருமான மார்க்கஸ் கவுட்டோ, 'காம்ப்ளி இதுவரை 14 முறை மறுவாழ்வு மையத்துக்குச் சென்றுள்ளார். அதில் மூன்று முறை நாங்களே அழைத்துச் சென்றோம். அதனால் எந்தப் பயனும் இல்லை' என்கிறார்.
1993-இல் இடது கை கிரிக்கெட் ஆட்டக்காரரான காம்ப்ளி, 17 டெஸ்ட் , 104 ஒருநாள் போட்டிகளில் 1,084 டெஸ்ட் ரன்கள் 2,477 ஒருநாள் ரன்களை எடுத்துள்ளார். அவர் தனது முதல் ஆறு டெஸ்ட் போட்டிகளில் 2 இரட்டை சதங்கள் உட்பட 4 சதங்களை அடித்துள்ளார்.
'இந்திய அணியில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர்' என்ற உலக சாதனை வினோத் காம்ப்ளிக்குச் சொந்தமானது. அவர் தனது இருபத்து ஒன்றாவது வயதில் இங்கிலாந்துக்கு எதிராக 224 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார்.
'இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை எடுத்த வீரர்' என்ற பெருமையும் காம்ப்ளிக்குச் சொந்தம். சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக் போன்ற ஆட்டக்காரர்களைவிட காம்ப்ளியின் சராசரி ரன் விகிதம் அதிகம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 2 இரட்டை சதங்கள் அடித்த உலகின் ஒரே வீரர் வினோத் காம்ப்ளி மட்டுமே. 21 வயதில் 6 டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்கள் அடித்த உலகின் ஒரே இந்திய வீரர் காம்ப்ளிதான்!
இத்தனை சாதனைகளை காம்ப்ளி பதிவுசெய்திருப்பதால்தான் 'எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே' என்று கிரிக்கெட் ரசிகர்களை விசனப்படவைத்துள்ளது. காம்ப்ளிக்கு ஐம்பத்து இரண்டு வயதாகிறது.
மும்பையில் பாந்த்ராவில் சொந்த ஃ பிளாட் வைத்துள்ளார் அவர். கழுத்தில் கயிறு தடிமனில் தங்கச் செயின், கையில் மோதிரம், காதுகளில் கடுக்கன்... என்று ஸ்போர்ட்ஸ் காரில் வலம் வந்தவர். அவரது முதல் திருமணப் பந்தம் தொடரவில்லை. இரண்டாவதாக ஆண்ட்ரியா என்ற மாடல் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
ஹிந்தி படங்கள், டி.வி. ஷோக்களில் நடித்தாலும், எதிலும் பிரகாசிக்க முடியவில்லை. 'லோக் பாரதி கட்சி'யில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டும், வெற்றி பெற முடியவில்லை. இன்று காம்ப்ளி வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...