யார் வாழ்க்கையில் யார்?
முன்பு நடிகர் சிவாஜி கணேசன் மட்டுமே நடித்த கோலிவுட்டின் பயோபிக் வகைத் திரைப்படங்கள், இன்று இளம் தலைமுறைக் கலைஞர்களாலும் நடிக்கப்படுகிறது.


முன்பு நடிகர் சிவாஜி கணேசன் மட்டுமே நடித்த கோலிவுட்டின் பயோபிக் வகைத் திரைப்படங்கள், இன்று இளம் தலைமுறைக் கலைஞர்களாலும் நடிக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு வரை பலரின் வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்களை எடுக்கத் துடிக்கின்றனர் கோலிவுட் இயக்குநர்கள். அந்தந்த கதாபாத்திரங்களுக்கு நடிகர்களைத் தேர்வு செய்வதில்தான் அவர்களுக்கு பெரும் பிரச்னை உள்ளது. அந்த வரிசையில் இனி உருவாகவுள்ள பயோபிக் படங்களில் யாரெல்லாம் பங்கெடுக்கிறார்கள் என அலசுகிறது இந்தக் கட்டுரை!
புரூஸ் லீ வேடத்தில் யார்?
மார்ஷியல் ஆர்ட்ஸை வெள்ளித் திரை மூலம் உலகின் கடைக்கோடி சினிமா ரசிகர்கள் வரை எடுத்துச்சென்ற புரூஸ் லீ மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. புரூஸ் லீ, இளைஞராக வாழ்ந்த காலகட்டத்தைப் பற்றி, பயோபிக் உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, பிரபல இயக்குநர் சேகர் கபூர் எடுக்க உள்ளார். இதற்கு, "லிட்டில் டிராகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. புரூஸ் லீ, 1950 -களில் ஹாங்காங்கில் அனுபவித்த இளமைக் கால காதல், குடும்பத்தின் ஏமாற்றம், நட்பு, துரோகம், நிறவெறி எனப் பல பரிமாணங்களை வெளிக்கொண்டு வருமாம், இந்த "லிட்டில் டிராகன்'. புரூஸ் லீ-யின் மகள், ஷேனன் லீ, இந்தப் படத்தின் கதை உருவாக்கத்தில் பங்கெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. புரூஸ் லீ வேடத்துக்காக மார்ஷியல் ஆர்ட்ஸில் கை தேர்ந்த ஒருவரை தேர்வு செய்ய இருக்கிறார் சேகர் கபூர்.
சாய்னா நேவால் - ஷ்ரத்தா கபூர்
பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால், இந்திய பேட்மின்டன் வரலாற்றில் புதிய பரிணாமத்தை உருவாக்கியவர். ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, சீன ஓப்பன் என பேட்மின்டன் விளையாட்டில் தனது முத்திரையைப் பதித்துள்ளார் சாய்னா. இவரின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. இப்படத்துக்கு "சாய்னா' என்றே பெயரிடப்பட்டுள்ளது. சாய்னா நேவாலாக பிரபல ஹிந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். சாய்னா கேரக்டரில் நடிக்கவுள்ளதற்காக முன்னாள் பேட்மின்டன் பிளேயர் கோபிசந்திடம் ஷ்ரத்தா பேட்மின்டன் பயிற்சி எடுத்து வருகிறார்.
லெஷ்மி அகர்வால் - தீபிகா படுகோன்
காதலை ஏற்க மறுத்த ஒரே காரணத்துக்காகத் தனது 15 வயதிலேயே ஆசிட் வீச்சு என்ற கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டவர்தான் லஷ்மி அகர்வால். ஆசிட் வீச்சுக்குப் பின்னால் சிதைந்த முகத்துடன் காணப்படுகிறார். இதனால், அவர் பல இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல், ஆசிட் விற்பனையை வழக்குகள் மூலம் ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்தார். இவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கிறது. "சபாக்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், லஷ்மியின் உருவத்தை நினைவுபடுத்துவது போல், திபீகா ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டது போன்று தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
கமலாதாஸ் - மஞ்சுவாரியர்
கேரளத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் கமலாதாஸின் பயோபிக்காக உருவாகியிருக்கும் "ஆமி' படம், லவ் ஜிகாத்தை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது எனக் கூறி, கேரள உயர் நீதிமன்றத்தில் இப்படத்திற்குத் தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகை மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை, பழம்பெரும் இயக்குநர் கமல் இயக்கியிருக்கிறார். கமலாதாஸ் தனது 15-வது வயதில் மாதவ்தாஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, தனது எழுத்துப் பணியைத் தொடங்கினார். கமலாதாஸ் தனது 65-ஆவது வயதில் 1999-ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தைத் தழுவினார். தனது பெயரையும் கமலா சுரையா என மாற்றிக்கொண்டார். அதைத் தொடர்ந்து பல்வேறு மத அமைப்புகள் இவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இதற்குச் செவிசாய்க்காத கமலா, புனேயில் வசித்து வந்தார். 2009-ஆம் ஆண்டு மே-31-ஆம் தேதி மறைந்தார். இவரின் வாழ்க்கைதான் "ஆமி'. சமீப காலமாகப் பல படங்கள் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நிலையில், "ஆமி' படமும் அப்பட்டியலில் இணைந்திருக்கிறது.
பிர்ஸா முண்டா - ரன்வீர் கபூர்
"காலா' படத்துக்குப் பிறகு, ஹிந்தியில் பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்க ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்றன. இன்னொரு பக்கம் இயக்குநர் கோபி நயினாரும் பிர்ஸா முண்டா பயோபிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.இந்நிலையில், கௌஷிக் ரெட்டி எனும் டோலிவுட் இயக்குநர் பிர்ஸா முண்டாவின் பயோபிக்கை தெலுங்கு - ஹிந்தி பைலிங்குவலாக எடுக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முண்டாவின் கதாபாத்திரத்தில் ரன்வீர் கபூரை நடிக்க வைக்கும் முயற்சிகளில் இருக்கிறார் பா. ரஞ்சித்.
விராட் கோலி - விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா அண்மையில் துபையில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டியை நேரில் காணச் சென்றுள்ளார்.போட்டி நடைபெறும் இடத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, ""இப்போது நடைபெறும் இந்தப் போட்டியில் விராட்கோலி குறைந்தது 50 ரன்களையாவது எடுப்பார் என்று நம்புகிறேன்''. பின் விஜய் தேவரகொண்டாவிடம் , உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்க ஆசை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ""ஏற்கெனவே எம். எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தை சுஷாந்த் சிங் நடித்துவிட்டார். அதனால் விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க விரும்புகிறேன்'' என்று பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...