காலை முதல் மாலை வரை வேலை... கடும் குளிரில் கொட்டும் மழையில், செங்குத்து மலைகளில் இருக்கும் தோட்டங்களில் வேலை... அட்டை பூச்சி எங்கள் ரத்தத்தை உறிஞ்சும். சில சமயம் நச்சுப் பாம்புகள் தீண்டும். கொடிய விலங்குகளான புலி, யானை தேயிலைத் தோட்டத்தில் புகுந்துவிடும். பலர் இந்த விலங்குகள் தாக்குதலில் இறந்து போயிருக்கிறார்கள். நாள் முழுவதும் கிள்ளும் தேயிலைக் கொழுந்துகளை கூடையில் போட்டு முதுகில் சுமக்க வேண்டும். நாள் முழுவதும் நின்று கொண்டுதான் வேலை. மாத விடாய் சமயத்தில் உயிர் போகும். ஒரு நாளைக்கு 25 கிலோ தேயிலை தளிர்கள் பறிக்க வேண்டும். அதில் தரம் குறைந்தது என்று சில கிலோ தளிர்களை விலக்கி விடுவார்கள். விலக்கப்பட்ட தளிர்களுக்கு ஏற்றவாறு கூலியைக் குறைப்பார்கள். அதே சமயம், விலக்கப்பட்ட தளிர்களை தேயிலைப் பொடியாக்க உபயோகித்துக் கொள்ளவும் மறக்க மாட்டார்கள். எப்படியாவது கூலியைக் குறைக்க வேண்டும் என்பது தான் கம்பெனியின் நோக்கம். மருத்துவ வசதி இல்லை. எங்களுக்குத் தரப்பட்டிருக்கும் லைன் வீடுகள் ஓர் அறை, ஓர் அடுப்பாங்கரை. அவ்வளவுதான். கோழிக் கூடுன்னு சொல்லலாம். குழந்தைகளைப் படிக்க வைக்கணும். சமைக்கணும். வீட்டு வேலைகளையும் செய்யணும். ஒவ்வொரு நாளும் ஒரு சுமையாக விடிந்து அஸ்தமிக்கிறது. வானத்தைத் தொடும் விலைவாசி உயர்வில் இந்த 231 ரூபா தினக் கூலி எந்த மூலைக்கு?... சொல்லிப் பார்த்தோம்... கேட்டுப் பார்த்தோம்... கோபத்தில் கத்திப் பார்த்தோம்... தொழிற்சங்கங்களும் சரி, தேயிலைத் தோட்ட நிர்வாகமும் சரி.. எங்கள் கோரிக்கைகளை கண்டுக்கவே இல்லை. பொறுத்தது போதும்... பொங்கி எழுவோம் என்று "பெம்பிளை ஒரும' (பெண்கள் ஒற்றுமை) என்ற அமைப்பை உருவாக்கி வேலை நிறுத்தம்.. சாலை மறியல் என்று பெண்கள் போராட்டத்தில் இறங்கினோம். தினக் கூலி 500 ரூபாய் வேண்டும் என்று ஒன்பது நாட்கள் நீண்ட போராட்டத்தில் மூணாறு நகர் ஸ்தம்பித்தது. எங்களின் கோரிக்கைகளை செய்தி ஊடகங்கள் சரிவர பொது மக்களிடம் கொண்டு செல்ல... கேரள மக்களின் ஆதரவு கிடைத்தது... இடது கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் கட்சி எல்லைகளைத் தாண்டி எங்களுக்கு முழு ஆதரவு தந்து ஒரு நாள் முழுவதும் எங்களுடன் போராட்டத்தில் பங்கு பெற்றார். எங்களது போராட்டம் இரண்டு நாட்களில் நின்று போகும் என்று கேரளத்தின் பிரதான அரசியல் கட்சிகள் கணித்திருந்தன. அதனால் எங்கள் போராட்டம், கோரிக்கைகளுக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் எங்கள் போராட்டம் தொடர்ந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட, சுற்றுலா பயணிகள் வருவது வெகுவாக குறைந்து போக.. மூணாறு நகரம் திணறி திக்கு முக்காடிப் போனது... பெண் தொழிலாளிகளின் ஒற்றுமை கண்டு, அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தர முன்வந்தன. நாங்கள் அந்த ஆதரவை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த போராட்டம் நிற்காது என்று அறிந்த கேரளா அரசும், தொழிற் சங்கங்களும், தேயிலை தோட்ட நிர்வாகமும் சேர்ந்து 300 ரூபாய் அளவில் ஊதியத்தைக் கூட்டினார்கள்.