/

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: தூக்கமின்மை, தலையில் வியர்வை, துர்நாற்றம்... தீர்வு என்ன?

எனக்கு வயது 46. மாதவிடாய் நின்று (90%) ஒருவருடமாகிறது. தூக்கமின்மை, தலையில் வியர்வை துர்நாற்றம் உள்ளது. உடல் மெலிந்துவிட்டது. இவை மாற வழி என்ன? சுதா, காரைக்குடி. "ஸ்தானி' என்றும் "ஆகந்து' என்றும் தோஷங

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:16 pm

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 46. மாதவிடாய் நின்று (90%) ஒருவருடமாகிறது. தூக்கமின்மை, தலையில் வியர்வை துர்நாற்றம் உள்ளது. உடல் மெலிந்துவிட்டது. இவை மாற வழி என்ன?

சுதா, காரைக்குடி.

"ஸ்தானி' என்றும் "ஆகந்து' என்றும் தோஷங்கள் அதாவது வாத, பித்த, கபங்கள் இருநிலைகளில் நின்று செயலாற்றக்

கூடும். தன் இருப்பிடத்திலிருந்து கொண்டு செயலாற்றக்கூடிய தோஷ நிலையானது ஆரோக்கியத்தைத் தக்க வைக்கக் கூடியதாகும். அதனை ஸ்தானி என்கிறோம். தோஷம் சீற்றமடைந்து தன் இருப்பிடத்தைவிட்டு வேறு ஒரு தோஷத்தின் இடத்துக்குச் சென்று ஆதிக்கம் செலுத்தினால் அதனை ஆகந்து என்று பெயரிட்டு, நோய்களுக்கு அதுவே காரணமாகின்றன என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது. உங்களுடைய விஷயத்தில் அதுதான் நடந்தேறியிருக்கிறது. பித்த தோஷத்தின் சாதாரண இருப்பிடமாகிய இதய நாபிக்கு இடையே உள்ள இடத்தைவிட்டு, கப ஸ்தானமாகிய தலைப் பகுதியை ஆக்கிரமித்துள்ளதால், தூக்கமின்மை, தலையில் வியர்வை, துர்நாற்றம் போன்றவை ஏற்பட்டுள்ளன. அங்கிருந்து பித்தத்தை மறுபடியும் அதன் இருப்பிடத்துக்குத் திருப்பிவிட்டால், உங்கள் உபாதைகள் அனைத்தும் விரைவில் நீங்கிவிடும். அந்த வகையில்-

ஏ தலைக்குப் பற்றாக சந்தனாதி தைலம் எனும் மூலிகைத் தைலத்தைத் தடவி, அதன் மேல் நெல்லி முள்ளி பற்றைப் போட்டு, சிறிது நேரம் சென்று இளஞ்சூடான வெந்நீரில் குளிப்பது நல்லது. கொதிப்படைந்து சூடாகி இருந்த நிலை மாறி நல்ல தூக்கம் வரும். குழப்பம், களைப்பு, கலக்கமின்றி புத்தி தெளிந்திருக்கும். ஆனால் சளி - நீர்க்கோர்வை உள்ள போது இதனைப் பற்றுப் போடுவது நல்லதல்ல.

ஏ நல்ல முற்றிய நெல்லிக்காய்களைத் தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து, வெயிலில் வைத்தெடுத்து நன்கு ஊறியதும் விதைகளை ஈரம்படாமல் அகற்றி மறுபடியும் அந்தத் தேன் அல்லது சர்க்கரைப் பாகிலேயே போட்டு நாட்பட வைத்திருந்து, தினமும் 1 -2 நெல்லிக்காய்

களைச் சாப்பிட்டு வர, உங்களுக்கு நல்ல பசி, பலம், புஷ்டி, மனத்தெளிவு, சுறுசுறுப்பு ஆகியவை ஏற்படும்.

ஏ மல்லி, சந்தனத்தூள், நெல்லி வற்றல் இம்மூன்றையும் கஷாயமாக்கி, அல்லது வெந்நீரில் டீ போல் தயாரித்துச் சாப்பிட, தலையிலுள்ள பித்தம் கீழிறங்கிவிடும்.

கீழே இறங்கிய பித்தம் நல்ல பித்தமாக இருக்க வாய்ப்பில்லை. காரணம், கப ஸ்தானத்தில் சிறைப்பட்டுக் கிடந்ததால், அதில் பல நச்சுத்தன்மைகள் இருக்கக்கூடும். கெட்டுப் போன அந்த பித்தத்தை உடனே வெளியேற்ற, காலையில் குடித்த புழுங்கலரிசிக் கஞ்சி செரித்தவுடன், மதிய வேளையில் "திரிவிருத் லேஹ்யம்' எனும் ஆயுர்வேத மருந்தை, சுமார் 10 - 15 கிராம் நக்கிச் சாப்பிட, நீர்ப்பேதியாகி கெட்ட பித்தம் வெளியேறிவிடும்.

அதன் பிறகு சிலநாட்கள் உணவில் அதிக காரம், புளி, உப்பு ஆகியவற்றைச் சேர்க்காமல், கசப்பு - துவர்ப்புச் சுவை நிறைந்த பாகற்காய், மணத்தக்காளி, அகத்திக் கீரை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவற்றை சற்று அதிகம் சேர்த்துவர, உங்களுடைய உபாதைகளில் பல நீங்கிவிடும். ஆனால் உடல் புஷ்டி ஆகாது. அதற்கு கூஷ்மாண்ட ரஸôயனம், அமிருதபிராசம், சியவன பிராசம் போன்ற மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வர, உடல் நல்ல வனப்பையும், ஆரோக்கியத்தையும் பெற்றுவிடும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.