நினைவு தெரிந்த நாளிலிருந்தே இப்படித்தான் இருக்கிறது என்று நீங்கள் கூறுவதால், இது தாய், தந்தையரின் "பீஜ தோஷத்தினால்' ஏற்பட்டுள்ளதோ என்று ஒரு சந்தேகம் எழுகிறது. "பீஜம்' என்றால் விதை என்று பொருள். நல்ல சத்தான ஒரு விதையை, பண்பட்ட ஒரு நிலத்தில் விதைத்தால், செழிப்பான ஒரு செடி வளருவதை நாம் காணலாம். அதுபோல, ஓர் ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்குத் தாயின் சினைமுட்டையும், தந்தையின் விந்துவும், த்ரிதோஷங்களாகிய வாத - பித்த - கப தோஷங்களின் சமநிலையைப் பெற்றிருக்க வேண்டும். வாதம் என்னும் தோஷத்தின் ஆதிக்க குணங்களாகிய வறட்சி, குளிர்ச்சி, முறமுறப்பு, நுட்பம், அசையும் தன்மை போன்றவை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ காணப்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு அதன் தாக்கமானது மூளையிலும் தசை நரம்புகளிலும் காணும். இருந்தாலும் பெற்றோரை மட்டுமே குறை கூறுவதும் தவறாகும். நீங்கள் வளர்ந்த சூழ்நிலை, இடம், உணவுமுறைகள், செய்யும் தொழில் போன்றவையும் காரணமாகலாம்.