இது புதுசு: பெயர் உமர்... நடத்துவதோ சைவ உணவகம்!
"கலைமாமணி' எஸ்.எம்.உமர் சென்னைவாசிகளுக்குப் புதியவரல்ல, தியாகராயநகர் பனகல் பார்க் அருகில் இவர் நடத்திவரும் உமர்கயாம் உணவு விடுதி மிகவும் பிரபலம். பாரசீகக் கவிஞர் கயாம், இவரது பெயரான உமர் இரண்டையும் சே


என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி
"கலைமாமணி' எஸ்.எம்.உமர் சென்னைவாசிகளுக்குப் புதியவரல்ல, தியாகராயநகர் பனகல் பார்க் அருகில் இவர் நடத்திவரும் உமர்கயாம் உணவு விடுதி மிகவும் பிரபலம். பாரசீகக் கவிஞர் கயாம், இவரது பெயரான உமர் இரண்டையும் சேர்த்து "உமர் கயாம்' என்ற பெயரில் வியத்நாம் தலைநகர் சைகோனில் ஒரு சைவ உணவகத்தை 1958 முதல் 1975 வரை நடத்திய அனுபவசாலி!
காரைக்காலைச் சேர்ந்த உமர், மதமாச்சரியங்களைக் கடந்து அனைத்துத் தரப்பினருடனும் நெருக்கமாகப் பழகுபவர். எம்.கே.தியாகராஜபாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., இந்திய முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமது என்று பல பிரமுகர்களும் இவரின் நெருங்கிய நண்பர்கள்.
பிரபலங்களுடன் பழகிய இவருக்குச் சாமான்யர்களிடமும் நெருக்கமான உறவும் தொடர்பும் உண்டு என்பதுதான் சிறப்பு.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள தர்பாரண்யேசுவரர் கோயிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானைத் தரிசிக்க ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கி வழிபட திருநள்ளாறில் பெரிய, சிறிய உணவகங்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லை. அதனால், எல்லோரும் 6 கி.மீ. தொலைவில் உள்ள காரைக்காலுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதிலும், பெரும்பாலானவை அசைவ உணவகங்களாக உள்ளதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தவிப்புக்கு உள்ளாகின்றனர். சில சைவ உணவகங்கள் இருந்தாலும், இடப் பற்றாக்குறையால் பக்தர்கள் உணவுக்கு அலையும் சூழ்நிலையே நிலவுகிறது.
இந்தச் சூழலில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே உமர் ஒரு சைவ உணவகத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இஸ்லாமியர் ஒருவர் சைவ உணவகம் நடத்துவதை அறிந்து, வியப்புடன் பலரும் அவரைப் பாராட்டிச் செல்வதைப் பார்த்து, அதுபற்றி விசாரிக்கும்போது மேலும் பல ருசிகரமான தகவல்கள் நமக்குக் கிடைத்தன.
காரைக்காலைச் சேர்ந்த உமர், இளம் வயதில் சென்னைக்குச் சென்று ஞானசௌந்தரி, லைலா மஜ்னு, அமரகவி, குடும்ப விளக்கு, ஜெனோவா போன்ற திரைப்படங்களின் தயாரிப்பில் பங்கேற்றவர்.
பிரெஞ்சு நாட்டு குடியுரிமை பெற்றுள்ள இவர், வியத்நாமில் 25 ஆண்டுகள் தங்கியிருந்து, 600-க்கும்
மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களை அந்த நாட்டு மொழியில் மாற்றம் (டப் செய்து) செய்து வெளியிட்டுள்ளார்.
திரைப்படத் துறையில் செய்த சாதனைக்காக, தமிழக அரசு 1997-ல் இவருக்கு "கலைமாமணி' விருதும், 2010-ம் ஆண்டில் புதுவை அரசு "கலைமாமணி' விருதும் வழங்கிக் கௌரவித்துள்ளன.
காரைக்காலில் சைவ உணவகத்தை திறந்தது பற்றி உமரிடம் கேட்டோம்.
""திருநள்ளாறு கோயிலைச் சேர்ந்த குருக்கள் சிலர் எனது நண்பர்கள். காரைக்காலில் தரமான சைவ உணவகம் இல்லை எனவும் அதனால் என்னை உணவகம் திறக்குமாறும் வலியுறுத்தினர்.
எனது வியத்நாம் அனுபவத்தை மனதில் வைத்து காரைக்காலில் தரமான, சுவையான சைவ உணவைச் சாப்பிடும் வகையில் இந்த உணவகத்தை ஆரம்பித்தேன். என்ன பெயர் வைப்பது என்று யோசித்த எனக்கு, சைவ உணவு விடுதியைத் தேடியலைந்த ஒருவர், "வணக்கம், இங்கே சைவ உணவு விடுதி எங்கே இருக்கிறது?' என்று அந்த பக்தர் கேட்டதுமே, எனது உணவு விடுதிக்கு "வந்தனா' அதாவது வணக்கம் என்று பெயர் வைக்கத் தீர்மானித்துவிட்டேன்.
திருநள்ளாறு வரும் பக்தர்களின் வசதிக்காகத் தொடங்கப்பட்டது என்றாலும், தற்போது எல்லா பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வரத் தொடங்கி விட்டனர்.
லாப நோக்கமின்றி, முற்றிலும் சேவை எண்ணத்திலேயே இந்த உணவகத்தை நடத்துகிறேன். சைவ உணவில் மக்கள் ருசிக்கு ஏற்றவாறு வகை வகையானவற்றைச் செய்து அளிக்கத் தயாராக இருக்கிறேன்'' என்கிறார் உமர்.
இஸ்லாமியர்கள் என்றாலே பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவு வகைகள் தயாரிப்பில் ஈடுபடுவார்கள் என்ற நிலையில், பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சைவ உணவுவிடுதி ஒன்றை ஓர் இஸ்லாமியர் நடத்துவது என்பதுதான் இந்த உணவு விடுதிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்புக்குக் காரணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...