காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நிலா விடு தூது: பாவலர் கோ. மலர்வண்ணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

கங்குல் பொழுதில் கவினுறவே காட்சிதந்தே
எங்கும் குளிரொளியை ஏற்றுகிறாய் - திங்களே!
உன்னை வருணித்தே ஒப்பில்லாப் பாட்டியற்றி
என்றும் புலவருனை ஏத்துகிறார் - நன்றாக!

ஆலமர் செல்வன் அழகுமுடி மீதினிலே
கோலமாய் வீற்றிருக்கும் கோதையே! - ஞாலத்தார்
ஏற்றி உரைப்போர்க்கே ஏவல் புரிந்திடுவார்!

போற்றிப் புகழ்கின்றேன் நானுன்னை! - ஏற்றருள்வாய்
என்வணக்கம்! வெண்ணிலவே! இந்த உலகத்தில்
நன்மைக்குப் பாடுபடும் நல்லவர் - உண்டெனிலே
அன்னவர்பால் செல்வாய்! அறிமுகம் செய்தென்றன்
அன்பை எடுத்துரைப்பாய் சந்திரனே! - 'உன்னிடத்தில்
உள்ளம் இழந்தாள் ஒருத்தி இருக்கின்றாள்;

கள்ளம் கபடமிலாள்; செந்தமிழாள் - வெள்ளத்தில்
சிக்குண்டது போலச் சிதறுண்ட தாய்நாட்டை
இக்கணமே மீட்டெடுக்க ஏகுவாய் - தக்கபடி
மீட்டெடுத்துக் காப்பாற்றி மேதினியோர் போற்றுவண்ணம்
நாட்டை அரசாள்வாய்; நல்லாளை - ஊட்டுமன்பால்
கட்டி யணைத்துக் கரம்பிடித்து வாழ்ந்திடுவாய்;

தட்டி விடவேண்டாம்' என்றுரைக்க - நட்பால்
உனைத்தூ தனுப்ப உவந்தழைப்பேன்! நீதான்
எனக்காகத் தூதுசெல் இன்று!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.