/

வல்லரசா, நல்லரசா...

ஓரு தேசத்தின் முன்னேற்றம் என்பது தனிமனித சிந்தனையிலிருந்துதான் உருவாகிறது.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:26 am

வி. உமா

ஓரு தேசத்தின் முன்னேற்றம் என்பது தனிமனித சிந்தனையிலிருந்துதான் உருவாகிறது. எங்கு தனி மனிதனின் எண்ணங்கள் ஆரோக்யமாக பொது நலத்துடன் சேர்ந்து காணப்படுகிறதோ, அங்கு தேசமும் எந்தக் குறைகளும் இல்லாமல் இருக்கும். பிற உயிர்களின் இன்ப துன்பத்தைத் தமதாக பாவித்தலே தற்கால பொதுநலம்; இப்போதைய சூழலில் பிறர்க்கு தீங்கு நினையாததும், செய்யாததும் மிகப்பெரிய பொதுநலம்.

ஆனால் நம் சமுதாயத்தில் இப்போது காணப்படும் மனப்பாங்கு மற்றவரை மிதித்தாவது தனக்குரிய சந்தோஷத்தை அடைவது. இதே எண்ணம் ஒட்டுமொத்தமாகப் பிரதிபலித்து நாட்டைக் குட்டிச்சுவராக்குவது உண்மை. தனக்குரிய மகிழ்ச்சி என்பது தனக்கே உரிய மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது பலரின் அவா. இந்தக் கண்ணோட்டம் சமூகத்தின் பல்வேறு தளங்களில் பயணிக்கிறது.

மாணவ சமூகத்திடம் இதை நாம் காணலாம். இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவதையும் காறித்துப்புவதையும் மாணவர்கள் தவிர்த்தார்கள். இப்போது பதினைந்து வயது சிறுவனோ, சிறுமியோ அதை மிகச் சாதாரணமாகச் செய்கிறார்கள். பஸ்ஸில் அவர்கள் அமர்ந்திருக்கும்போது தள்ளாத முதியவர்கள் ஏறினால்கூட எழுந்திருந்து இடம் தருவதில்லை.

சின்னத்திரை, பெரிய திரை, பத்திரிகைத்துறையில் முன்னணியில் இருப்போர் சமூகப் பொறுப்புணர்வோடு செயல்படுவதில்லை. "நான் போராடி இந்த இடத்தை அடைந்தது பணம், புகழ் பெறத்தான்; அதற்காக நான் எதையும் செய்வேன்' என்ற எண்ணத்தை மாற்றி, "என்னைப் பின்தொடர என்னையும் அறியாமல் எனக்குப் பின்னே பலர் உண்டு; அவர்களுக்கு நல்லது செய்தாலே, நான் சாதித்தவனாவேன்' என்ற மனப்பாங்குடன் இயங்குதலே இப் பிரச்னைகளுக்குத் தீர்வாகும்.

அரசியலில் அறவியலும் வேண்டும். எதற்கும் சமரசம் செய்துகொள்ளாத நேர்மையான தலைவர்கள், வழிகாட்டிகள் பொதுவாழ்வுக்கு வரவேண்டும். அவர்களுக்கான அங்கீகாரத்தைத் தருவதற்கு ஒருபோதும் தயங்கக்கூடாது. 2012-ஆம் ஆண்டு ஏற்பட்ட "அராபிய வசந்தம்' ஏன் நம் நாட்டிலும் வரக்கூடாது?

நம்மவர்களின் பிரச்னையே பொறுமை காக்கவேண்டிய இடத்தில் ஆவேசப்படுவதும் ஆவேசப்பட வேண்டிய இடத்தில் பொறுமை காப்பதும்தான்; போக்குவரத்து சிக்னலில் சிவப்பு, மஞ்சளாகி பிறகு பச்சையாவதற்குப் பொறுமை இல்லாமல் வண்டியுடன் சீறுவார்கள்; பக்கத்து நாட்டான் நம் நாட்டு எல்லைக்குள் 20 கிலோ மீட்டர் ஊடுருவி உள்ளே நுழைந்து கூடாரம் போட்டுவிட்டான் என்று அறிந்தாலும் கொதித்தெழமாட்டார்கள்.

கொள்கைப் பிடிப்பு இல்லாத அரசியல், நேர்மை இல்லாத வியாபாரம், ஒழுக்கம் இல்லாத கல்வி, குருவை மதிக்காத போக்கு, மனசாட்சி இல்லாத இன்பம், மனிதாபிமானம் இல்லாத அறிவியல், தியாகம் இல்லாத இறை வழிபாடு ஆகியவை மன்னிக்க முடியாத பாவங்கள் என்றார் காந்திஜி.

இவற்றில் முதன்மையான - கொள்கை இல்லாத அரசியலைப் புறந்தள்ளிவிட்டு இந்திய அரசியலில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். இளம் வயதினர் சரியான பாதை நோக்கி தமது ஆற்றலை, அறிவைப் பெருக்க வேண்டும். புரையோடிப்போன அரசியல் புண்ணுக்கு கொள்கை மீது பற்றுகொண்ட இளந்தலைமுறையினரே சரியான தேர்வு - தீர்வு.

படிக்கும் வயதிலேயே நல்ல நெறிகளை அறிவுறுத்த வேண்டும். அவர்கள் செய்யும் நல்ல காரியங்களை உடனுக்குடன் பாராட்ட வேண்டும். ஆண் - பெண் உறவு பற்றி தெளிவான சிந்தனையை விதைக்க வேண்டும். ""சினிமா, பீச், பார்க், மால்'' போன்ற விஷயங்களைத் தாண்டி புத்தகங்கள் என்ற புது உலகுக்கு அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

""அறிவை விசாலமாக்கு/ அகண்ட பார்வையால் விழுங்கு; உலகை/ மானிட சமுத்திரம் நானென்று கூவு'' என்ற பாரதிதாசன் விடுத்த அறைகூவல் மெய்யென்று நிரூபிக்கலாம்.

நமது இப்போதைய முதல் தேவை நல்லரசு. ஒரு நாடு நல்லரசு ஆகாமல் வல்லரசு ஆக முடியாது. சமூக வாழ்வில் நிலைகளை மேம்படுத்தாமல் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியாது.

நம்மை வழிநடத்திச் செல்ல இப்போதும் யாருமில்லை; ஆற்ற வேண்டிய கடமைகளை வழுவாமல் செய்து சமூகத்துக்கு மிகச்சிறந்த தொண்டினைச் செய்கிறோம் என்ற மனத்திருப்தியுடன் வாழ்வோம்.

எமர்சன் சொன்னது போல, ""ஒரு சீசருக்குப் பின்னால் ஒரு பிரமாண்ட ரோமானியப்பேரரசு இருக்கிறது'' - ""ஒரு ஏசு நாதருக்குப் பின்னால் பிரமாண்டமான கிறித்துவ மதம் இருக்கிறது''.

ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு இயக்கத்தின், அமைப்பின் நீட்டிக்கப்பட்ட நிழல். இந்த நினைவோடு நாம் நேர்மையுடனும் சமூக உணர்வுடனும் செயல்பட்டால் நம் நாடும் வல்லராசவது திண்ணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.