சிலருக்கு குழந்தைகள் சதா கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால், நம, நமவென்று தலை வலிக்கத் தொடங்கி விடும். அதற்காக, அவர்களுக்கு தங்களது குழந்தைகள் மீது பாசமில்லை, அக்கறை இல்லை என்று பொருளில்லை. அவர்களது பொறுமையின் எல்லை அவ்வளவு தான். குழந்தைகளது தொடர் கேள்விக் கணைகளிலிருந்து தப்புவதற்காக காசு செலவானாலும் பரவாயில்லை, காய்ச்சல் வந்தாலும் பரவாயில்லை, பல் சொத்தையானாலும் பரவாயில்லை என்ற ரீதியில் குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களது வாயை அடைப்பதில் கவனமாக இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் குழந்தைகள் என்றால் சமர்த்தாகச் சாப்பிட வேண்டும், சமர்த்தாக விளையாட வேண்டும், சமர்த்தாகப் படிக்க வேண்டும், அதை விடச் சமர்த்தாக சீக்கிரமே தூங்கி விட வேண்டும். இது தான் குழந்தைகளுக்கான நியதி என்பது அவர்களது வாதம். ஆனால் நமது குழந்தைகள் ஒன்றும் ஷோ கேஸ் பொம்மைகள் அல்லவே!