மேற்கண்ட காரணங்களை எல்லாம் தாண்டி; இந்தியாவில் கர்ப்பம் என்பது தற்செயலான ஒரு விசயமாகவே இப்போதும் கருதப்படுவதும் கூட இதற்கொரு காரணமென்றால் அது மிகையில்லை. திருமணமானால் நான்கைந்து மாதங்களிலோ, அல்லது முதல் திருமண நாள் வருவதற்குள்ளாகவோ நிச்சயம் பெண் கருவுற்றே ஆக வேண்டும் என்பது இங்கே நமது சமூகத்தில் எழுதப் படாத விதி. அதனால் பெரும்பான்மையான திருமண உறவுகளில் முதல் குழந்தைப்பேறு என்பது பெரும்பாலானோருக்கு போகிற போக்கில் தன்னிச்சையாகவோ அல்லது தற்செயலாகவோ அமைந்து விடக் கூடும். அப்படி அமையவில்லை என்றால் ”வீட்ல விசேஷமா? என்ன கல்யாணமாகி 6 மாசமாகப் போகுது இன்னும் ஒரு நல்ல செய்தி சொல்ல மாட்டேங்கறியே” என்பதான உற்றார், உறவினர்களின் வீணான விசாரணைகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதாகி விடும். இம்மாதிரியான பதட்டங்களால் தான் முதல் குழந்தைப் பேறு எனும் அருமையான, அற்புதமான விசயத்தை அவசர, அவசரமாக எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தமாகி விடுகிறது. முதல் குழந்தைக்குப் பிறகு இரண்டாவதாகக் கருவுற்ற பெண்கல் மகப்பேறு மருத்துவரிடம் செக் அப்புக்குச் செல்லும் போது அவர்கள் கேட்கும் முதல் கேள்வியே... இந்தக் குழந்தைக்காக நீங்கள் திட்டமிட்டீர்களா? அல்லது தற்செயலானதா? என்பதாகவே இருக்கும். ஏனெனில் இரண்டாவது குழந்தைப்பேற்றின் போது பெற்றோர்கள் என்பவர்கள் தங்களது அறியாமையின் எல்லையைத் தாண்டி வெளியில் வந்து விடுகிறார்களில்லையா? ஆகவே குழந்தை வளர்ப்பில் இன்னும் வேறு என்ன என்ன புதுமைகளைக் கண்டறிய முடியும் என்றெல்லாம் கணவனும், மனைவியும், முதல் குழந்தையுமாக உட்கார்ந்து ஆலோசிக்க, ஒருவருக்கொருவர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள தேவையான அவகாசம் எடுத்துக் கொண்டு முதல் குழந்தைக்கும், இரண்டாம் குழந்தைக்குமான பந்தத்தின் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சியை அப்போதே தொடங்கி விடலாம்.