ஐடி, பார்மா பங்குகள் விற்பனை: சென்செக்ஸ் 360 புள்ளிகள் வீழ்ச்சி
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 360 புள்ளிகளை இழந்தது.


இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 360 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கி பெரிய அளவில் மேலே செல்லவில்லை. குறிப்பாக, ஐடி, எஃப்எம்சிஜி, ஃபார்மா, ஹெல்த்கேர், வங்கி, நிதி நிறுவனப் பங்குகளில் விற்பனை அதிகரித்ததால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.371.12 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.6,934.93 கோடிக்கு பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.6,012.67 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 38.21 புள்ளிகள் குறைந்து 70,022.10-இல் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 71,049.46 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னர், 70,319.04 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 359.64 புள்ளிகள் (0.51 சதவீதம்) குறைந்து 70,700.67-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,899 பங்குகளில் 2,130 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,681 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
88 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
19 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் என்டிபிசி, இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் உள்பட மொத்தம் 11 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், ஐடிசி, விப்ரோ, ஏசியன் பெயின்ட், ஹெச்சிஎல் டெக் உள்பட 19 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 21,454.60-இல் தொடங்கி 21,459.00 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னர், 21,247.05 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 101.35 புள்ளிகள் (0.47 சதவீதம்) குறைந்து 21,352.60-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 16 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 34 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
6 நாள்களாக பங்குகள் விற்பனையில் எஃப்ஐஐ
இந்திய பங்குச்சந்தையில் கடந்த 6 நாள்களாக எஃப்ஐஐக்கள் என்று அழைக்கப்படும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனர். அதாவது, அவர்கள் கடந்த ஜனவரி 17 முதல் 25-ஆம் தேதி வரை 6 நாள்களில் மொத்தம் ரூ.34,765.27 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனர். அதே சமயம், உள்நாட்டு நிறுவனங்கள் 18,129.78 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கி முதலீட்டை அதிகரித்துள்ளதாக சந்தைப் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...