பேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 455 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து,  மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 455 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2025, 9:58 am

 நமது நிருபர்



மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 455 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. வங்கிப் பங்குகள் சற்று விற்பனையை எதிர்கொண்டாலும், ஐடி, ஆட்டோ, மெட்டல், ஃபார்மா, ஹெல்த்கேர் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.4.21 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.386.83 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த திங்கள்கிழமை ரூ.518.88 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,188.68 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 239.40 புள்ளிகள் கூடுதலுடன் 71,970.82-இல் தொடங்கிய சென்செக்ஸ், 71,625.18 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 72,261.40 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 454.67 புள்ளிகள் (0.63 சதவீதம்) உயர்ந்து 72,186.09-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,944 பங்குகளில் 2,353 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,1508 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 83 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

19 பங்குகள் விலை உயர்வு:

சென்செக்ஸ் பட்டியலில் ஹெச்சிஎல் டெக், மாருதி, டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல் ஆகியவை 2 முதல் 4.50 சதவீதம் வரை உயர்ந்தன. இவை உள்பட மொத்தம் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், பவர்கிரிட், இண்டஸ்இண்ட் வங்கி, ஐடிசி, கோட்டக் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் உள்பட மொத்தம் 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 158 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 53.50 புள்ளிகள் கூடுதலுடன் 21,825.20-இல் தொடங்கி 21,737.55 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 21,951.40 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 157.70 புள்ளிகள் (0.72 சதவீதம்) உயர்ந்து 21,929.40-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 36 பங்குகள்ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.