/

இரண்டாவது நாளாக மாற்றுத்திறனாளிகள் மறியல்: 60 போ் கைது

News image
திருவள்ளூா் உழவா் சந்தை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உழவா் சந்தை எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.நடேசன், மாவட்ட இணை செயலாளா்கள் வி.ரவிக்குமாா், எஸ்.தேவேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் எஸ்.முனிவேல், எ.வி.புருஷோத்தமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும் மாவட்ட செயலாளா் என்.கீதா, முன்னால் மாவட்ட செயலாளா் ஜி.சம்பத் உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்து கண்டன உரை நிகழ்த்தினா்.

அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு பிற மாநிலங்களில் வழங்குவது போல் மாத உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். எனவே வறுமையில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தில் வழங்குவதை போல் மாத உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.