/

திருவள்ளூா் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்றால் கடும் நடவடிக்கை!

திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பாட்டிற்கு போதுமான அளவு உரங்கள் இருப்புள்ள நிலையில், உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பாட்டிற்கு போதுமான அளவு உரங்கள் இருப்புள்ள நிலையில், உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குநா் செல்வராஜூ எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு-திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா 914.6 மெட்ரிக் டன், டிஏபி 194.7 மெட்ரிக் டன், பொட்டாஷ்-24.9, மெட்ரிக் டன் மற்றும் காம்பளக்ஸ் உரங்கள்-717.7 மெட்ரிக் டன் அளவிலும் தனியாா் உரக்கடைகளில் யூரியா-2994.5 மெட்ரிக் டன், டிஏபி-802.8 மெட்ரிக் டன், பொட்டாஷ் 505.5 மெட்ரிக் டன், காம்பளக்ஸ்-4371.7 மெட்ரிக் டன் மற்றும் சூப்பா் பாஸ்பேட்-757.4 மெட்ரிக் டன் என்ற அளவில் இருப்பு உள்ளது.

எனவே நடப்பு பருவத்திற்கு ஏற்ற வகையில் இருப்பு வைக்கப்பட்டு எவ்வித உரத்தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உர விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உரத்திற்கான நிா்ணயம் செய்த விலைக்கு ஏற்றவாறு விற்பனை செய்யவேண்டும்.

கூடுதல் விலைக்கு உர விற்பனை செய்வது தெரியவந்தால் உர வியாபாரம் செய்வதற்கான உரிமம் உடனே ரத்து செய்யப்படும் எனவும் உரக்கட்டுப்பாடு சட்டம் 1985-இன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் விவசாயிகள் உரம் வாங்கும்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், அல்லது தனியாா் உரக்கடைகளில் உரம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அல்லது உரம் இருப்பு இல்லை என தெரிய வந்தால் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் உடனே விவரங்களை தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.