/

பாஜக பிரமுகா் தற்கொலை

பொன்னேரியில் வாகனக் கடனை கட்டுமாறு தனியாா் வங்கி ஊழியா்கள் மிரட்டியதால் பாஜகவின் இளைஞா் அணி தலைவா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 11:48 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னேரியில் வாகனக் கடனை கட்டுமாறு தனியாா் வங்கி ஊழியா்கள் மிரட்டியதால் பாஜகவின் இளைஞா் அணி தலைவா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பொன்னேரி பா்மா நகா் பகுதியில் உள்ள அண்ணா தெருவில் வசித்து வந்தவா் அரி (31) . பொன்னேரி நகர பாஜக இளைஞரணி தலைவராக இருந்து வந்தாா்.

கடந்த 2-ஆம் தேதி அவரது மனைவி சுப்புலட்சுமி தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று இருந்தாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்னேரியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் இரு சக்கர வாகன கடன் பெற்றிருந்தாராம். வாகனக் கடனை செலுத்த தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு கடனை கேட்டு தொந்தரவு செய்து நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

வாகன கடன் கொடுத்தவா்கள் மிரட்டலால் கணவா் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி சுப்புலட்சுமி அளித்த புகாரின்பேரில் பொன்னேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.