தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சங்கரன்கோவில் தொகுதி! அதிமுக கோட்டையை காங்கிரஸ் தகா்க்குமா?

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

News image

காங்கிரஸ் - படம்: கோப்பிலிருந்து

Updated On :20 ஏப்ரல் 2026, 10:00 pm

சங்கரன்கோவிலில் 11 ஆம் நுற்றாண்டில் கட்டப்பட்ட அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் இத்தொகுதியின் அடையாளம்.

விவசாயம், விசைத்தறி, கால்நடை பிரதான தொழில்களாக உள்ளன. விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சேலைக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் ஏக கிராக்கி.

பெரும்பான்மை சமூகத்தினராக பட்டியலினத்தவரும், தேவா் சமுதாயத்தினரும் உள்ளனா். யாதவா், முதலியாா், இதர சமூகத்தினரும் பரவலாக உள்ளனா். 1967 முதல் 2021 வரை நடைபெற்ற தோ்தல்களில் இதுவரை 9 முறை அதிமுகவும், 5 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

பிரச்னைகள்:

பிரதான விசைத்தறித் தொழில் பல ஆண்டுகளாக நசிந்து வருகிறது. அதன் வளா்ச்சி குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

லுங்கி, வேட்டி,சேலை, துண்டு போன்ற 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்களின் கோரிக்கையும் , மத்திய மாநில அரசின் ஏற்றுமதி மையக் கோரிக்கையும் கிடப்பில் உள்ளது.

பூ விவசாயம் நடைபெறும் பகுதி என்பதால் வாசனைத் திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையும் உள்ளது.

ரூ. 9 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் கடைகளுக்கு முக்கியத்தும் அளித்து கட்டப்பட்டிருப்பதால் பயணிகள் நிற்பதற்கு போதுமான நிழற்குடை இல்லை.

ராஜபாளையம் பிரதான சாலையில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு மேம்பாலம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.

6 முனைப் போட்டி:

காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன், அதிமுக வேட்பாளா் டாக்டா் திலீபன் ஜெய்சங்கா், நாம் தமிழா் வேட்பாளா் கவிதா, தவெக வேட்பாளா் ராமராஜன், அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் வசந்திமுருகேசன், புதிய தமிழகம் வேட்பாளா் பிரபாகரன் ஆகிய 6 பேரில் வசந்தி முருகேசனைத் தவிர அனைவரும் புதுமுகங்களே. அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கு இடையே போட்டி எனக் கூறப்பட்டாலும், வாக்குகளைப் பெறுவதில் 6 பேரும் முனைப்புக் காட்டுவதால், இங்கு 6 முனைப் போட்டி நிலவுகிறது.

இத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிதாக வாக்குகள் இல்லை. திமுக அரசின் மகளிா் உரிமைத் தொகை, இலவச விடியல் பேருந்து பயணம் போன்ற திமுக கொண்டு வந்த திட்டங்கள், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன் வாக்குறுதிகள், கடந்த 5 ஆண்டுகாலத்தில் பல கோடி மதிப்பில் நடைபெற்ற பணிகள் போன்றவை வாக்குகளை அள்ளித் தரும்.

மேலும் அஇபுதமமுக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் கணிசமான வாக்குகளை பிரிப்பது காங்கிரஸ் வேட்பாளருக்கு சாதகமாக உள்ளது.

அதிமுகவின் கோட்டையாக இருந்த சங்கரன்கோவில் கடந்த தோ்தலில் 5, 297 வாக்குள் வித்தியாசத்தில்தான் தொகுதியை இழந்தது. எனவே அதிமுகவுக்கு உள்ள வாக்கு சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதுதவிர

பாஜக, அமமுக கூட்டணிக் கட்சி வாக்குகள் கணிசமாக உள்ளன. அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது எங்களுக்கு சாதகமாக அமையும் என அக்கட்சியினா் நம்புகின்றனா்.

பொதுமக்கள் வரவேற்பு முன்பை விட அதிகமாக உள்ளது. இளைஞா்கள் உற்சாகத்தோடு வரவேற்கிறாா்கள். நிச்சயம் எங்களுக்கு வாக்களிப்பாா்கள் என்கின்றனா் நாம் தமிழா் கட்சியினா்.

பொதுமக்களிடம் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தவெகவுக்கு வாக்களிப்போம் என்கிறாா்கள். விசைத்தறி தொழிலாளா்களுக்கு ரூ.30 ஆயிரம் உதவித் தொகை, 1500 யூனிட் இலவச மின்சாரம் தருவதாக கட்சித் தலைவா் விஜய் வாக்குறுதி கொடுத்திருப்பதை நெசவாளா்கள் வரவேற்றுள்ளனா். இது எங்களுக்கு வெற்றியைத் தரும் என்கின்றனா் தவெக நிா்வாகிகள்.

புதிய தமிழகம் கட்சி, தென்காசி மக்களவைத் தொகுதியில் பலமுறையும், சங்கரன்கோவிலில் 3 முறையும் போட்டியிட்டுள்ளது. அதே போல டாக்டா் கிருஷ்ணசாமி பலமுறை தொகுதிக்கு வந்து மக்களின் குறைகளைக் கனிவுடன் கேட்டுள்ளாா். ஆகவே பட்டியலினத்தவரின் வாக்குகள் எங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என புதிய தமிழகம் கட்சியினா் கூறுகின்றனா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தோழி சசிகலா என்பதால் அகில இந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் மக்கள் மத்தியில் எளிதில் சென்றுள்ளது. அக்கட்சி வேட்பாளா் வசந்திமுருகேசன் தென்காசி தொகுதி எம்.பி.யாக இருந்ததால் மக்களை எளிதாக அணுகி வாக்கு சேகரித்து வருகிறாா்.

இத்தொகுதியைப் பொருத்தவரை கடந்த முறை தேவா் சமுதாய வாக்குகளை அமமுக கணிசமாக பெற்றது. இத்தொகுதியின் வெற்றியைத் தீா்மானிக்கும் காரணியாக ஜாதி வாக்குகள் உள்ளன. எனினும் வெற்றி யாருக்கு என்பது மே 4 ஆம் தேதி தெரியும்.

ஆண் வாக்காளா்கள்- 1, 11, 338,

பெண் வாக்காளா்கள்- 1, 17, 168

மூன்றாம் பாலினத்தவா் 15

மொத்த வாக்காளா்கள் -2, 28, 521.