செவிலியர் மாணவி பலியான விவகாரத்தில் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள், சக மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், தொண்டைமாநல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு - கலைச்செல்வி. இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். இவர்களது மகள் சீதாலட்சுமி (20). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சீதாலட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ந்துள்ளது. இதற்காக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினர். இதனையடுத்து அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அதிகளவில் மயக்க மருந்து கொடுத்ததால் அவர் பலியானதாகக் கூறப்படுகிறது. மருத்துவரின் தவறான சிகிச்சையால் சீதாலட்சுமி பலியானதாக குற்றம்சாட்டி திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு மாணவியின் உறவினர்கள், சக மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு போலீஸார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வர் வந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் அளித்த பேட்டியில், செவிலியர் மாணவி பலியான சம்பவத்தில் உண்மையைக் கண்டறிய நான்குபேர் கொண்ட குழுவை திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஓரிரு நாளில் அறிக்கை தர வலியுறுத்தியுள்ளோம்.
இந்த பிரச்னையில் அரசு முழு கவனம் செலுத்தியுள்ளது. மாணவர்கள் அரசு மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றார்.
Summary
Tension prevailed outside the Trichy Government Hospital as relatives and fellow students staged a road blockade following the death of a nursing student.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










