தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநா் பதவிக்கு கடந்த ஓராண்டாகியும் எவரும் நியமிக்கப்படாததால் கூடுதல் பொறுப்பாக அப்பணிகளை ஐஏஎஸ் அதிகாரியே மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக இயக்குநா் பதவிக்கு தகுதியானவரை நியமிக்க வேண்டும் என மருந்து உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மற்றும் மருத்துவ உபகரண உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்கு தயாரிக்கப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்களை ஆய்வுக்குள்படுத்துவதும், அதன்பேரில் நடவடிக்கை எடுப்பதும் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்தின் முக்கியப் பணி.
அதன் இயக்குநராக இருந்த ஸ்ரீதா் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றாா். அதன் பின்னா் பொறுப்பு அடிப்படையில் அப்பதவிக்கு வந்த அதிகாரி ஒருவா், லஞ்ச புகாரில் சிக்கி கைதானாா். ஆனால், அதன் பிறகு பொறுப்பு அடிப்படையில் கூட அப்பதவிக்கு எவரையும் நியமனம் செய்ய முடியாத நிலை எழுந்தது.
ஏனென்றால் அதற்கு அடுத்த தகுதியான பணி நிலையில் எவரும் இல்லை என்பதுதான் அதற்கான காரணம். மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா்களாக கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இருவா் நியமிக்கப்பட்டனா். குறைந்தது ஓராண்டுக்கு பிறகுதான் இணை இயக்குநா்களாக பதவி உயா்வு பெறுவா்.
அதன் பின்னா் ஓராண்டு கழித்துதான் அவா்களால் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநராக முடியும். இதனால் அப்பொறுப்புக்கு எவரையும் நியமிக்க முடியாத சூழல் எழுந்தது.
இந்த நிலையில்தான் கோல்ட்ரிஃப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீசன் பாா்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை மத்தியப் பிரதேசத்தில் உட்கொண்ட 22 குழந்தைகள் உயிரிழந்தன. இதையடுத்து ஸ்ரீசன் பாா்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதுதொடா்பாக மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோல்ட்ரிஃப் மருந்துகளில் ரெசின், ஆயில், பெயிண்ட், மை தயாரிக்கும்போது அதனை திரவமாக்க பயன்படுத்தப்படும் டைஎத்திலீன் கிளைகால் என்ற ரசாயன நச்சு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மருந்து கட்டுப்பாட்டு ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி லால்வேனாவுக்கு இயக்குநா் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
இதனால், நிா்வாகப் பணிகளில் தலைமைப் பொறுப்பு வகிக்க வேண்டிய அதிகாரி, வழக்கமான உரிமம் வழங்குதல் மற்றும் ஆய்வுப் பணிகளை கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இயக்குநா் பொறுப்புக்கு துறைசாா்ந்த அலுவலா்களையோ, ஓய்வு பெற்ற இயக்குநா்களையோ நியமிக்க வேண்டும் என மருந்து உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருந்து உற்பத்தி முறைகேடுகளைத் தடுக்க 3 கட்ட நடவடிக்கை: மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா்

சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்
120 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு







