தமிழ் செய்திகள்
சென்னை : தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய் மக்கள் முன்னிலையில் முக்கிய கோப்புகளில் இன்று கையொப்பமிட்டார்.
தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று(மே 10) காலை 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, மக்கள் முன்னிலையில் முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார். வீடுகளில் இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் நுகர்வோருக்கு, 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்ற கோப்பில் முதல் கையொப்பமிட்டார் விஜய்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற புதியதொரு திட்டத்தையும் தொடங்கி வைத்து அதற்கான ஆணையில் அவர் கையொப்பமிட்டார். போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப் பொருள் தடுப்புப் படை திட்டம் என்ற கோப்பிலும் கையொப்பமிட்டார். அதனைத்தொடர்ந்து, மக்களிடையே உரையாற்றினார்.
200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு குறித்த அரசாணை ஞாயிற்றுக்கிழமை(மே 10) பகல்வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்றும் 500 யூனிட்டிற்குள் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்றும் மின் நுகர்வோர்களில் 2.23 கோடி பேர் 500 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்துபவர்கள் என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Summary
Chief Minister Vijay Signs Important Files in the Presence of the People
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










