மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜெயலலிதாவுக்குப் பின்.. அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களால் உதயமான கட்சிகள்!

ஜெயலலிதாவுக்குப் பின் அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களால் உதயமான கட்சிகளின் பட்டியல்

News image

ஜெயலலிதா - file photo

Updated On :13 மார்ச் 2026, 10:58 am

அதிமுக முன்னாள் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவிலிருந்து வெளியேறி புதிய கட்சித் தொடங்கியவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி வருகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே. சசிகலா, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று, தன்னுடைய கட்சிக்கு இன்று பெயர் சூட்டி அறிவித்திருக்கும் நிலையில், இதுவரை அதிமுகவில், ஜெயலலிதா மறைவுக்குப் பின், கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சித் தொடங்கியவர்களில், இப்போதுவரை கட்சியாகத் தொடர்வது அமமுக மட்டுமே என்று கூறப்படுகிறது.

இன்று, சசிகலா தன்னுடைய புதிய கட்சிக்கு பெயர் அறிவித்திருக்கும் நிலையில், இதுவரை அதிமுகவிலிருந்து பிரிந்துச் சென்றவர்கள் உருவாக்கிய அரசியல் கட்சிகள் மட்டும் கிட்டத்தட்ட ஒன்பது என்று கூறலாம்.

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள், கட்சியில் உள்ள அவர்களது ஆதரவாளர்களால் தூண்டப்பட்டு, புதிய கட்சியைத் தொடங்கி, அதற்குத் தலைவர்களாக ஆகிவிடுகிறார்கள். இந்த டிரெண்ட் பல ஆண்டு காலமாக நீடிக்கிறது.

அமமுக: சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார். அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசலால், கட்சியிலிருந்து வெளியேறி, புதிய கட்சியைத் தொடங்கி, கட்சியின் பொதுச் செயலராக தினகரன் செயல்படுகிறார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். வரும் 2026 தேர்தலில், அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்றுள்ளார்.

தீபாவின் கட்சி: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் - அம்மா - தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை 2017ஆம் ஆண்டு தொடங்கினார். ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, சில ஆதரவாளர்கள், தீபா வீட்டு வாயில் முன்பு நின்றுகொண்டு அவருக்கு கொடுத்த ஆதரவின் விளைவாக 2017, பிப். 24ஆம் தேதி இந்தப் பேரவையை அறிவித்தார். பிறகு இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினார். அரசியல் வாழ்க்கையோடு, வாழ்க்கைப் பிரச்னையும் இணைய கடந்த 2019ஆம் ஆண்டு பேரவையைக் கலைத்துவிட்டு அரசியல் வாழ்வை முடித்துக் கொண்டு, அதிமுகவில் இணைவதாக அறிவித்தார்.

தீபா கணவர் மாதவன் கட்சி: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், மனைவிக்குப் போட்டியாக எம்ஜிஆர் - ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகம் என்ற (எம்ஜேடிஎம்கே) என்ற கட்சியைத் தொடங்கினார். மனைவி பிப்ரவரியில் தொடங்கிய பேரவையில் கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் வந்த கருத்து வேறுபாடு காரணமாக, 2017 ஏப்ரல் மாதம் மாதவன் புதிய கட்சியை அறிவித்திருந்தார்.

சசிகலா குடும்பத்திலிருந்து மற்றொரு கட்சி: சசிகலாவின் அக்கா மகனும் டிடிவி தினகரனின் தம்பியுமான பாஸ்கரன், அண்ணா எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் 2018ஆம் ஆண்டு தொடங்கினார். ஜெயலலிதா இருக்கும்போதே அரசியலுக்கு வந்தவன் என்று குரலோடு அவர் தனது பேச்சுகளைத் தொடங்கினார்.

திவாகரன் தொடங்கிய கட்சி: ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக, சசிகலாவின் கையிலிருந்து நழுவியது. இதனால், தினகரன் புதிய கட்சித் தொடங்க, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சசிகலாவின் தம்பி திவாகரனும் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். பிறகு அதிமுகவிலேயே தன்னையும் கட்சியையும் இணைத்துக் கொண்டார்.

பண்ருட்டி ராமச்சந்திரன்: திமுக, அதிமுக, பாமக, மக்கள் நலவுரிமைக் கழகம், தேமுதிக என பல கட்சிகளில் பயணம் மேற்கொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன், தன்னுடைய 88வது வயதில் தற்போது எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது, ஒத்த கருத்துடையவர்களுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்போம் என்று அறிவித்துள்ளார்.

புகழேந்தியும் புதிய கட்சி: அதிமுகவில், சசிகலாவின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த பெங்களூரைச் சேர்ந்த புகழேந்தி, பிறகு அமமுக, ஓபிஎஸ் அணி என மாறி மாறி, பிறகு தனக்கென புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததை விமர்சனம் செய்திருந்த இவர், தற்போது திமுகவுக்கு பிரசாரம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ் கட்சி: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை உருவாக்கினார். மக்களவைத் தேர்தலையும் சந்தித்தார். பிறகு, அந்த பெயரை அதிமுக தொண்டர்கள் உரிமைக் கழகம் என மாற்றினார். இறுதியில் அனைத்தையும் விட்டுவிட்டு திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

மீண்டும் ஆரம்பப் புள்ளியிலிருந்து.. சசிகலாவின் கட்சி: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, கட்சிக் கொடி, சின்னத்தை அறிவித்தார் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இது தொண்டர் ஒருவர் உருவாக்கிய கட்சி என்றும், அதில் தன்னை இணைத்துக் கொள்வதாகவும் ஒத்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றும் சசிகலா அறிவித்திருக்கிறார்.

Summary

List of parties formed by those who left AIADMK after Jayalalithaa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.