/

சிதம்பரம் சிவலோகநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சிதம்பரம் சௌந்தரநாயகி சமேத சிவலோகநாதர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக...

News image
சிதம்பரம் சிவலோகநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்.
Updated On :28 ஜனவரி 2026, 6:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள ஸ்ரீ நந்தனார் மடத்தில் உள்ள சௌந்தரநாயகி சமேத சிவலோகநாதர் கோயில் மகாகும்பாபிஷேகம் இன்று(ஜன. 28) காலை 9.50 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நந்தனார் மடத்தில் உள்ள திருநாளைப்போவார் என்கிற நந்தனார் கோயில் மற்றும் சௌந்தரநாயகி சமேத சிவலோகநாதர் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை (ஜன.28) காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிதம்பரம் சிவலோகநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் பங்கேற்ற மக்கள்.

சிதம்பரம் சிவலோகநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் பங்கேற்ற மக்கள்.

மேலும், நந்தனாரின் தியான மண்டபம் புதுப்பிக்கப்பட்டு அதில் நந்தனாரின் வரலாறும், சுவாமி சகஜானந்தா வரலாறும் வைக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன.25-ம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் மகாலட்சுமி ஹோமங்களுடன் யாகாசாலை பூஜை தொடங்கியது. 26-ம் தேதி யாகசாலையில் கும்பங்களில் சுவாமிகள் ஆராஹணம் செய்யப்பட்ட திருமுறை பாராயணம் நிகழ்ச்சியும், முதல் கால யாகபூஜை மற்றும் பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. 27-ம் தேதி காலை 2-ம் கால யாகபூஜை யும், மாலை 3-ம் கால யாகபூஜையும், ருத்ர ஹோமம், வஹோதார ஹோமம் மற்றும் பூர்ணாஜூதி தீபாராதனையும் நடைபெற்றது.

புதன்கிழமை காலை 4-ம் கால யாகபூஜையும், நாடி சந்தானம், பூர்ணாஹூதி தீபாராதனையும் முடிவுற்று யாகசாலையிலிருந்து கடங் கள் புறப்பட்டு ஊர்வலமாக சென்று காலை 9.50 மணிக்கு கோயில் விமான கலசங்களுக்கு சம்பந்த தீட்சிதர் தலை மையிலான சிவாச்சாரியார்கள் கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் சௌந்தரநாயகி சமேத சிவலோகநாதருக்கு மகாபிஷேகம் மகாதீபாரதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை நந்தனார் கல்விக் கழகத் தலைவர் கே.ஐ.மணிரத்தினம், செயலர் வி.திருவாசகம், பொருளாளர் டி.ஜெயச்சந்திரன், ஆலோசகர் ஏ.தெய்வநாயகம், மட நிர்வாகக்குழு செயலர் டி.கே.எம்.வினோபா, நிர்வாகிகள் ஏ.சங்கரன், பி.பன்னீர்செல்வம், கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தினம் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

நகர காவல் ஆய்வாளர் வி சிவானந்தம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.